அவர்களுடன் பேச, கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித்தொழுது
உரையாடி - கொடுந் தொழிலையுடைய அன்னோர் அவனை வருத்தாது மருங்கே
விலகிப் பணிமொழி கூறி, ஆங்கவர் உரைப்போர் - அவனுடன் கூறுகின்றவர்,
அருந்திறல் கேளாய் - அரிய வலியையுடையவனே கேட்பாயாக, ஈங்கு எம்
குருமகன் இருந்தோன் - இங்கே எங்களுடைய ஆசிரியன் இருக்கின்றனன்,
அவன்பால் போந்தருள் நீ என - அவனிடம் நீ வந்தருள் என்ன, அவருடன்
போகி - சாதுவன் அவர்களுடன் சென்று, கள் அடு குழிசியும் கழிமுடை
நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் - கள்ளைக்
காய்ச்சுகின்ற பானையும் மிகுந்த புலால் நாற்றமுடைய தசையும் வெள்ளிய
என்புகளின் வற்றலும் கலந்துள்ள இருக்கையின் கண்ணே, எண்கு தன்
பிணவோடு இருந்தது போலப் பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி-கரடி
தன் பெட்டையோடு இருத்தல் போல மனைவியுடன் அவன் இருந்த தன்மையைக்
கண்டு, பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி-நாகர் மொழியாற்
பேசுந் திறத்தால் அவனை வயமாக்கி அவன் பக்கத்தினனாகி, கோடு
உயர் மரநிழல் குளிர்ந்தபின் - கிளைகள் ஓங்கிய மரத்தின் நிழலில்
வெப்பந் தணிந்தபின்பு ;
கற்றனனாதலின் அவர்களுடன்
பேச என விரித்துரைக்க. மாக்களாகிய, ஆங்கவர் என்க. அருந்திறல்:
ஆகுபெயர். குருமகன்-குரு; தலை மகன். இருந்தோன்: முற்று. நாற்றம்:
ஆகுபெயர். இருக்கை-இருப்பிடம்; கட்டிலுமாம். 1"பன்றி
புல்வாய்" என்னுஞ் சூத்திரத்து ''ஒன்றிய'' என்னும் இலேசால் பிணவு
என்பது கரடிக்குங் கொள்ளப்பட்டது. பெண்டு-மனைவி. அவன் பான்மையனாகி-அவன்
அன்புக்குரியனாகி என்றுமாம்.
71--79.அவன் ஈங்கு நீ வந்த
காரணம் என் என - நாகர் தலைவன் சாதுவனை நோக்கி ஈண்டு நீ வந்த
காரணம் யாது என வினவி, ஆங்கவற்கு அலைகடல் உற்றதை உரைத்தலும்-வணிகன்
அவனுக்குத் தான் அலை செறிந்த கடலிற் பட்டதைக் கூறலும், அருந்துதல்
இன்றி அலை கடல் உழந்தோன் வருந்தினன் அளியன் - அலைகின்ற கடலின்கண்
துன்பமுற்ற இவன் உணவொன்றும் இன்றி வருந்தியுள்ளான் இரங்கத்தக்கான்
ஆகலின், வம்மின் மாக்காள் - வாருங்கள் மக்களே, நம்பிக்கு இளையன்
ஓர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் என -
இவ்வாண்டகைக்கு இளமை பொருந்திய ஒரு நங்கையை அளித்து விருப்பந்தரும்
கள்ளும் புலாலும் வேண்டுமளவும் கொடுங்கள் என மொழிய, அவ்வுரை கேட்ட
சாதுவன் அயர்ந்து வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும் - அம்மொழி
கேட்ட சாதுவன்