எரி விழி-எஞ்ஞான்றும்
சினத்தினாற் சிவந்த கண். நன்று - அறம். செட்டி-செட்டு உடையவன்
; சிரேட்டி என்பதன் சிதைவுமாம். உறை- உறைந்து என வினையெச்சமாக்குக.
தமக்கு - உயிர்கட்டு.
112--117 நன்று
சொன்னாய்-நன்குரைத்தாய், நல் நெறிப்படர்குவை. நல்வழியிலே
செல்வாய், உன்றனக்கு ஒல்லும் நெறி அறம் உரைக்கேன்-உனக்கு இயலும்
வழியால் அறத்தினைக் கூறுவேன், உடை கல மாக்கள் உயிர் உய்ந்து
ஈங்குறின்-கடலிற் கலமுடையப்பட்ட மக்கள் உயிர் தப்பி ஈண்டுச்
சேர்ந்தால், அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி-கொல்லுந்
தொழிலைவிட்டு அவர்களுடைய அரிய உயிரைக் காத்து, மூத்துவிளி மா
ஒழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிகென - முதுமையுற்று இறக்கும்
விலங்குகளைத் தவிர வேறு எந்த உயிரினிடத்தும் கொலைத் தொழிலை
நீங்குவாயாக என்று சாதுவனுரைப்ப ;
முதுமையுற்று இறக்கும்
விலங்குகளை மட்டும் உண்ணுக என்றான். தீத்திறம் - கொலை. ஓம்பி
ஒழிகவென் றியையும்.
117--127. சிறுமகன்
உரைப்போன் - கீழோனாகிய நாகன் உரைப்பவன், ஈங்கு எமக்காகும்
இவ்வறம் செய்கேம் - ஈண்டு எமக்குப் பொருந்திய இவ்வறத்தினைச்
செய்யாநிற்பேம், ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்கென -
நினக்கேற்ற அரிய பொருள்களைக் கொண்டு செல்க வென்று, பண்டும்
பண்டும் கலங்கவிழ்மாக்களை உண்டேம் - முன்பெல்லாம் மரக்கலங்
கவிழ்ந்து வந்த மக்களைக் கொன்று உண்டோம், அவர் தம் உறுபொருள்
ஈங்கிவை- அவர்களுடைய மிக்க பொருள்களாகும் இங்குள்ள இவைகள்,
விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு இவை இவை கொள்கென
- சந்தன மரங்களும் மெல்லிய ஆடைகளும் சிறந்த பொருட்குவைகளுமாகிய
இவற்றையெல்லாம் கொள்க என்று கூற, எடுத்தனன் கொணர்ந்து - சாதுவன்
அவைகளை எடுத்துக் கொணர்ந்து, சந்திரதத்தன் என்னும் வாணிகன்
வங்கஞ் சேர்ந்ததில் - சந்திரதத்தன் என்னும் வணிகனது மரக்கலம்
வந்ததில், வந்து உடன்ஏறி - உடன் ஏறிவந்து, இந்நகர் புகுந்து ஈங்கு
இவளொடு வாழ்ந்து - இந் நகரத்தை யடைந்து இவ்வாதிரையுடன் வாழ்ந்து,
தன் மனை நன் பல தானமும் செய்தனன் - தனது மனையின் கண் பல நல்லறங்களையுஞ்
செய்தனன்.
உரைப்பவன்
அரும்பொருள் கொள்கெனப் பொதுவிற் கூறிப் பின்பு அவற்றை விதந்து,
இவை யிவை கொள்க வென்றுரைக்க வென்க. விரைமரம் - மணமுடைய சந்தனம்
அகில் முதிலிய மரங்கள். சேர்ந்ததாகிய வங்கத்திலென்க.