பக்கம் எண் :

பக்கம் எண் :231

::TVU::
17. உலகவறவி புக்க காதை
 

ஒரு தனி ஏறி - அந்த உலக வறவியின்கண் தான் தனியே சென்று, பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் - நகரிலுள்ளாருடன் பலரும் துதித்து வணங்கும், முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-முதியவளாகிய சம்பாபதியின் கோயிலை மனம் மொழி மெய்களால் வணக்கஞ் செய்து, கந்துடை நெடு நிலைக் காரணம் காட்டிய தந்துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி - நெடிய நிலையினையுடைய தூணின்கணிருந்து பழவினையாகிய காரணங் காட்டும் பொருட்டு எழுதப்பட்ட தம் துணையாகிய கந்திற்பாவையை வணங்கித் துதித்து ;

மும்மையின் வணங்கி-மூன்றுமுறை வணங்கி யென்றுமாம். நெடு நிலையுடைக் கந்து என மாறுக. காட்டுவதற்கு மயனால் எழுதப்பட்டவென விரித்துரைக்க. "கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய, அந்தி லெழுநிய வற்புதப் பாவை" (7:94-5) என்றற் றொடக்கத்தனவாக இந் நூலுட் பிறாண்டு வருவன காண்க. மணிமேகலையுடன் மற்றையோரையும் உளப்படுத்தி, ''தந்துணைப்பாவை'' என்றார்.

91--98.வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்து - ஞாயிற்றின் கதிராற் சுடப்பட்டு வெம்பிய மூங்கில் கரிந்த காட்டின்கண், கருவி மாமழை தோன்றியது என்ன - தொகுதியாகிய முகில்கள் தோன்றினாற்போல; பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு - பசியானது உடலைத் தின்ன வருந்திய துன்பமுடைய மக்களுக்கு, அமுதசுரபியோடு ஆயிழை தோன்றி - மணிமேகலை அமுதசுரபியோடு தோன்றி, ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது-ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும் இது, யாவரும் வருக ஏற்போர் தாம் என - ஏற்போர் யாவரும் வருக என்று கூற, ஊண் ஒலி அரவத்துஒலிஎழுந்தன்றே யாணர்ப்பேரூர் அம்பலம் மருங்கென்-உணவுண்ணும் ஆரவாரமாகிய முழக்கம் எழுந்தது புதுவருவாயினையுடைய பேரூரின் அம்பலத்தின்கண் என்க.

தின என்றது இலக்கணை வழக்கு. வருகவென அழைத்துச்சொரிய வந்துண்ணும் ஆரவாரம் என விரித்துரைக்க. மழை தோன்றிப் பொழிந்தாற்போல ஆயிழை தோன்றிச் சொரிய வென்க. ஒலியரவம் : ஒருபொரு ளிருசொல். அம்பல மருங்கு ஒலியெழுந்தன்றென்க.

காயசண்டிகை யென்னுங் காரிகை, நோக்கி வணங்கி, ''என்னோய் துடைப்பாய்'' என்றலும், மணிமேலலை பெய்தலும், அவள் பசி நீங்கித் தொழுது உரைக்கும் ; உரைப்பவள், ''உலகவறவி யொன்றுண்டு ; அதன்பாற் போக'' என்று கூறிப் போகிய பின்னர், ஆயிழை ஒதுங்கி வந்து வந்தனை செய்து ஏறி வணங்கித் தொழுது ஏத்தித் தோன்றி, ஏற்போர் யாவரும் வருக'' என, அம்பல மருங்கு ஒலியெழுந்தன்று என வினை முடிவு செய்க.

உலகவறவி புக்க காதை முற்றிற்று.