பக்கம் எண் :

பக்கம் எண் :248

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

நல்லறம்-அருளறம்: தயாதருமம், 1 "வினையின் வந்தது வினைக்கு விளையாவது,......, மக்கள் யாக்கை யிதுவென உணர்ந்து'''' என இந்நூலுள் முன்னர் யாக்கையி னிழிபு கூறப்பட்டிருத்தலும் காண்க.

140--142. மண்டமர் முருக்கும் களிறு அனையார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ-மிக்குச் செல்லுகின்ற போரையழிக்கும் களிற்றினை யொத்த ஆடவர்க்கு மகளிர் கூறும் பேரறிவும் உண்டோ, கேட்டனை ஆயின் வேட்டது செய்கென - இதனைக் கேட்டா யாதலின் இனி நீ விரும்பியதைச் செய்க என்று கூறி;

அமரின்கண் பகைவரைக் கொல்லும் என்றுமாம். களிறனை யார்க்கு என்றது முன்னிலைப்புறம். "இளமை நாணி முதுமை யெய்தி ......செறிவளை மகளிர் செப்பலு முண்டோ" (4: 107 - 10) என முன்னர்ச் சுதமதி உதயகுமாரனுக்கு நீதி கூறியவாறுங் காண்க.

143--150.   வாள்திறல் குரிசிலை மடக்கொடி நீங்கி -மணிமேகலை வாள் வலியுடைய மன்னவன் புதல்வனை நீங்கி, முத்தை முதல்வி முதியாள் இருந்த-அனைவருக்கும் முற்பட்ட முதல்வியாகிய சம்பாபதி அமர்த்திருக்கின்ற, குச்சரக் குடிகைதன் அகம் புக்கு ஆங்கு - சிறிய கோயிலினுள் நுழைந்து அவ்விடத்தில், ஆடவர் செய்தி அறிகுநர் யார் என - ஆண்மக்களின் செயலை அறிவோர் யாவர் என்று எண்ணி, தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி - இதழ் விரிகின்ற மலர்மாலையை யணிந்த சம்பாபதியை வணங்கித் துதித்து, மாய விஞ்சை மந்திரம் ஓதி - மாயவித்தை யுடைய மந்திரத்தை ஓதி, காயசண்டிகை எனும் காரிகை வடிவாய்- காயசண்டிகை என்னும் விஞ்சை மகளின் வடிவங்கொண்டு, மணி மேகலைதான் வந்து தோன்ற - மணிமேகலை வெளியே வந்து தோன்ற ;

முத்தை: முந்தை யென்பதன் திரிபு. குச்சரம் - கூர்ச்சர நாடு; குச்சரக் குடிகை - கூர்ச்சர நாட்டுப் பணியமைந்த சிறிய கோயில் என்பர். ஆங்கு:அசை. ஆடவர் செய்கையை அறிகுநர் யார் என்றது மணிமேகலை தன் அறிவுரையைக் கேட்ட பின்னும் உதயகுமரன் காமத்தைக் கடக்கலாற்றாது தன்னைப் பற்றுதலுங் கூடுமென எண்ணினாள் என்னும் குறிப்பிற்று. மாயவிஞ்சை மந்திரம் என்றது மணிமேகலா தெய்வம் அருளிய வேற்றுரு எய்துவிக்கும் மந்திரத்தை.

151--158. அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்கு - அழகிய மலர் மாலையினையுடைய உதயகுமரன் காயசண்டிகை யுருக்கொண்ட நங்கையிடஞ் சென்று, குச்சரக் குடிகைக் குமரியை மரீ இ-பின்பு கோயிலின்கண் உள்ள சம்புத்தெய்வத்தைப் பொருந்தி நின்று, பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த காயசண்டிகை தன்கையில் காட்டி - தன் கையிலிருந்த திருவோட்டைப் பெரும்பசியால்வருந்திய

1 மணி. 4 : 112 - 20.க.