பக்கம் எண் :

பக்கம் எண் :249

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

   காயசண்டிகையின் கையிற் கொடுத்து, மாயையின் ஒளித்த
   மணிமேகலைதனை-மாயையினால் மறைந்த மணிமேகலையை, ஈங்கிம்
   மண்ணீட்டு யார் என உணர்கேன் - ஈண்டுள்ள இப்
   பாவைகளுள் யார்என்று அறிவேன், ஆங்கவள் இவள் என்று
   அருளாய் ஆயிடின் -அம் மணிமேகலை இன்னளென அறிவித்
   தருளாய் ஆயின்,பல்நாள் ஆயினும் பாடுகிடப்பேன் - பலநாட்க
   ளாயினும் ஈண்டு வரங்கிடப்பேன் ;

மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை. "நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்" (6: 47) என இந்நூலுள் முன்னரும், 1 "கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்" எனச் சிலப்பதிகாரத்தும் வருதல் காண்க. ஆங்கவள் : ஒரு சொல் ; 2 "தெள்வன் புனற் சென்னி" என்னுஞ் செய்யுளுரையில், "இங்கிவை உங்குவை யென்பன ஒரு சொல்" எனப் பேராசிரியருரைத்தமை காண்க. பாடு கிடத்தல்-வரம் வேண்டிக் கிடத்தல் ; கருதியது கைகூடும் வரை எழாது கிடத்தலென்க ; 3 "பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந் தாளுக்கு" என்பது காண்க.

159--172.  இன்னும் கேளாய் இமையோர் பாவாய்-வானோர்தலைவியே இன்னுங் கேட்பாயாக, பவளச் செவ்வாய்த் தவள வாள் நகையும் - பவளம்போற் சிவந்த வாயின்கணுள்ள வெள்ளொளி பொருந்திய பற்களும், அஞ்சனம் சேராச் செங்கயல் நெடுங்கணும்- மையெழுதப்படாத சிவந்த கயல்போலும் நீண்ட கண்களும், முறிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்-கடை நெரியுமாறு வளைந்து வரிந்த வில்லைப் போன்ற புருவங்களும், குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக் கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொள களிற்றினை யடக்கும் குவிந்த முள்ளையுடைய கருவியும் தோட்டியும் கூரியமுனையையுடைய கவைத்த முட்களாலாகிய பரிக்கோலுமாகிக் காவல் கொள்ள, கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி-கல்வியாகிய பாகரால் காப்பினையுடைய வலையை வீசி, வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க - சொல்வன்மையுடைய வாயாகிய யாழினால் இனிதாக விளங்குமாறு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவைவிளக்கும் முதுமொழிகளை எடுத்துக்காட்டி, புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென - புதிதாகக் கொள்ளப்படும் யானை வேட்டத்தின்கண் அகப்பட்டதென்று, முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த - சம்பாபதீ நின்னுடைய கோயிலிற் புகுந்த, மதிவாள் முகத்து மணிமேகலைதனை ஒழியப்போகேன்-மதிபோலும் ஒள்ளிய முகத்தினையுடைய மணிமேகலையை ஈண்டு விடுத்துச் செல்லேன் ; உன் அடி தொட்டேன் - நின் திருவடிகளைத் தொட்டுச் சூளுற்றேன் ; இது குறை என்றனன் இறைமகன் தான் என் - எனக்கு வேண்டும் காரியம் இதுவென்று உதயகுமரன் கூறின னென்க.


1 சிலப். 5: 30. 2 திருச்சிற். 237. 3 சிலப். 9: 15.