42--46.
47--50
|
அதிர்கழல்
வேந்தன் அடிபிழைத்தாரை - ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய மன்னவன்
அடிக்குப் பிழைசெய்தாரை, ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக்கோட்டம்
- தண்டிக்கும் தண்டத்தினையுடைய சிறைச்சாலையின்கண், விருப்பொடும்
புகுந்து - விருப்பத்துடன் சென்று, வெய்துயிர்த்துப் புலம்பி - வெய்தாக
உயிர்த்து வருந்தி, ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை-அவ்விடத்திலே
பசியுற்றிருக்கும் அரிய உயிரையுடைய மக்களை, வாங்கு கையகம் வருந்த
நின்று ஊட்டலும் - வாங்குகின்ற கையினிடம் வருந்துமாறு நின்று உண்பித்தலும்
;
இறைவனுக்கும் பெரியார்க்கும் பிழைசெய்தாரைத் திருவடி பிழைத்தாரென்று
கூறுதல் மரபு. தண்டத்து உறு - தண்டத்தினைப் பொருந்தி நுகரும். பசியுற்று
வெய்துயிர்த்துப் புலம்பும் மாக்களென மாறுக. ஆருயிர் மாக்கள் என்றது,
பெறுதற்கரிய மக்களுயிரைப் பெற்றார் இங்ஙனம் வருந்துகின்றனரே
யென இரங்கிக் கூறியபடி. ஈண்டுக் கூறியவாறு "வாங்குநர் கையகம் வருத்துத
லல்லது" (11 : 49) "வாங்குகை வருந்த மன்னுயி ரோம்பலின்" (14
: 23) "வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்து" (17 : 5) என முன்னர்ப்
போந்தமையுங் காண்க.
ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து-இங்ஙனம் பலரையும் உண்பித்த
பாத்திரம் ஒன்றே என வியப்புற்று, கோட்டங் காவலர் - சிறைக்கோட்டங் காப்பவர், கோமகன் தனக்கு - அரசனுக்கு, இப் பாத்திர தானமும்
பைந்தொடி செய்தியும் - இப் பாத்திரத்தின் தானச் சிறப்பையும்
இதனைக் கொண்ட இளங்கொடியின் செயலையும், யாப்புடைத்தாக இசைத்தும்
என்று ஏகி - உறுதி யுடைத்தாகக் கூறுவோம் எனச் சென்று ;
கோட்டங் காவலர் வியந்து தானமும் செய்தியும் கோமகனுக்கு இசைத்துமென்
றேகி யென்க,
நெடியோன் குறள் உருவாகி நிமிர்ந்து தன் அடியிற்படியை அடக்கிய-திருமால்
வாமன வடிவங்கொண்டு பின் பேருருவமாய்ப் பூமியைத் தன் திருவடியின்கண்
அடக்க, அந்நாள்-அற்றைநாளில், நீரிற்பெய்த - பூமியை நீருடன்
அளித்த, மூரி வார் சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள்-வலிய
பெரிய வில்லையுடைய மாவலியின் வழித்தோன்றலாகிய அரசுனுடைய புகழ்மிக்க
திருமகளாகிய, சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு - சீர்த்தி
என்னும் பெயருடைய செல்வமிக்க தேவியுடன், போது அவிழ்பூம்பொழில்
புகுந்தனன்புக்கு - பூக்கள் விரிந்த அழகிய சோலையிற் சென்று புகுந்து
; |