பக்கம் எண் :

பக்கம் எண் :282

Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை
 

விந்தம் காக்கும் விந்தா கடிகை - விந்த மலையைக் காவல் புரியும் விந்தாகடிகை எனபவள், அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள் - காயசண்டிகை அம் மலையின்மீது சென்று அவ் விந்தா கடிகையின் வயிற்றில் அடங்கினள் ஆகலின், கைம்மை கொள்ளேல் காஞ்சன - காஞ்சனனே சிறுமையைக் கொள்ளாதே, இது கேள் - இதனைக் கேட்பாயாக ;

அந்தரி யென்பதும் விந்தாகடிகை யென்பதும் ஒரு பொருட் பெயர்கள். விந்தமலையைக் காத்தலின் விந்தாகடிகை யென்பதும் காரணப்பெயர். விந்தாகடிகை தன் வயிற்றிடூஉம் என்க. கைம்மை - சிறுமை; தனக்குரியளல்லாதாளை விரும்புதல் ; உதயகுமரன் மணிமேகலைக்குப் பழம் பிறப்பின் நாயகனாதலின் அவன் இறந்ததுபற்றி மணிமேகலையைக் கைம்மையாகக் கருதிக் தெய்வங் கூறிற்றெனலுமாம் என்பர், டாக்டர் உ. வே. சாமிநாதையர்.

123-129. ஊழ்வினை வந்து இங்கு உதயகுமாரனை ஆருயிர் உண்டதாயினும் - இப்பொழுது ஊழ்வினையானது உருத்து வந்து உதயகுமரன் அரிய உயிரை உண்டதாயினும், அறியாய் வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன் - விஞ்சையானாகிய காஞ்சனனே ஆராயாது கொடிய தீவினையைச் செய்தாய், அவ் வினை நின்னையும் அகலாது ஆங்குறும்-அக் கொடுவினை நின்னையும் நீங்காமல் வந்து பற்றும், என்று இவை தெய்வம் கூறலும் - என்று இவைகளைக் கந்திற்கடவுள் உரைத்தலும், எழுந்து கன்றிய நெஞ்சிற் கடுவினை உருத்து எழ விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் - காஞ்சனன் துன்புற்ற வுளத்தோடு எழுந்து தான் செய்த கொடிய வினை வெகுண்டெழுந்து பற்ற வானிலே குறுக்காகப் படர்ந்துபோயினன் என்க.

கடுவினை - உதயகுமரனைக் கொன்ற தீவினை. உருத்து - உருக்கொண்டு என்றுமாம்.

கோட்டம் செல்வக் காப்புடைத்தாக, தாரோன் கேட்டு மனங் கொண்டு எழுந்து சென்று ஏறலும், கணவன் கையறவெய்தி வந்து இழிந்து தேர்ந்து திரிவோனாய்க் கண்டு பல பாராட்டவும், நீங்கிச் சென்று காட்டி மெல்லியல் உரைத்தலும், விஞ்சையன் புக்கு ஒளித்து அடங்கினன்; அரசிளங் குமரனும் கொள்ளான் மனங்கொண்டு எழுந்து போகி எழுந்து கழிந்து நீங்கி அணைந்து புகுதலும், விஞ்சையன் எழுந்து சென்று வீசிப் புகுதலும, பாவை உரைக்கும்; அங்ஙனம் உரைப்பது கூறலும், விஞ்சையன் எழுந்து படர்ந்து போயினன் என வினைமுடிவு செய்க.
 

உதயகுமரனை வாளாலெறிந்த காதை முற்றிற்று.