பக்கம் எண் :

பக்கம் எண் :291

Manimegalai-Book Content
21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை

11--8. திட்டிவிடம் உண நின் உயிர் போம்நாள் - திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்ட நின் உயிர் சென்ற முற்பிறவியில், கட்டழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்-மிக்க நெருப்பினையுடைய ஈமத்தில் எனது உயிரைக் கொளுத்தினேன், உவவன மருங்கில் நின்பால் உள்ளம் தவிர்விலேன் அதலின் - உவவுனத்தின்கண் நின்னிடம் வைத்த மனந் தவிர்ந்திலேன் ஆதலால், தலைமகள் தோன்றி மணி பல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து-அவ்விடத்து மணிமேகலா தெய்வம் தோன்றி என்னை மணிபல்லவத்தின்கட் செலுத்தி, பிணி்ப்பறு மாதவன் பீடகை காட்டி-பற்றற்ற நற்றவனாகிய புத்தனது திருவடிப் பீடிகையைக் காண்பித்து, என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி எனது பண்டைப் பிறப்பினை யறிந்த என் முன்னே தோன்றி, உன் பிறப்பு எல்லாம் ஒழிவின்றி உரைத்தலின்-நின் பிறப்பு முதலிய அனைத்தையும் தவறாது கூறியருளினமையின் ;

திட்டி: திருஷ்டி என்பதன் சிதைவு; திட்டி விடம் - கண்ணில் நஞ் சுடையதொரு பாம்பு; இந்நூலுட் பலவிடத்து இது கூறப்பெற்றுள்ளது. போம் நாள்-போகும் நாள்: காலவழுவமைதி. போநாள் என்னுயிர் சுட்டேன் என்றது முற்பிறப்பின் செய்தி. உவவனத்திற் கண்டபொழுது உதயகுமரன்பால் மணிமேகலைக்கு வேட்கையிருந்ததென்பதனை, "புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம், இதுவோ வன்னாய் காமத் தியற்கை" (5: 89-90) "அவன்பா லுள்ளம், நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்" (10: 44-5) என முன் வந்துள்ளமையாலறிக. பிணிப்பு - கட்டு: பற்று. பீடிகை காட்டி அதனால் என் பிறப்புணர்ந்த என்முன் தோன்றி யென்க.

19--26. பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் - உலகில் பிறந்தோர்கள் இறப்பதனையும் இறந்தோர்கள் பிறப்பதனையும், அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் - அறம் அளிக்கின்ற அமைதியையும் பாவம் கொடுக்கின்ற துன்பத்தையும், யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக் காயசண்டிகை வடிவானேன் காதல-நினக்கு எடுத்துக் கூறி நின் தீவினைகளை நீக்கும் பொருட்டுக் காதல யான் கயசண்டிகை வடிவமெய்தினேன், வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் - கல்க்கமுற்ற சீற்றத்தினையுடைய விஞ்சையானது கூரிய வாளினாலே, வெவ்வினை உருப்ப விளிந்தினையோ என - கொடிய ஊழ்வினை உருத்தலான் இறந்தனையோ என்று, விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி - துன்ப மொழிகளால் வெவ்விதாக உயிர்த்துப் புலம்பி, அழுதனள் ஏங்கி அயாவுயிர்த்து எழுதலும்-ஏங்கி யழுவோளாய் நெட்டுயிர்ப்புடன் ஏழுதலும் ;

சால்பு - அமைதி ; அதனாலுண்டாம் இன்பம். வெகுளியை யுடைய விஞ்சையன் வாளாலென மாறுக. உருப்ப - வெகுள. விழுமம்-துன்பம்.