கந்திலும் கோட்டத்திலுமுள்ள பாவையும்
முதியோனையும் வழிபடல் புரிந்தோர் என்க.,
5--10. சா
துயர் கேட்டுக் சக்கரவாளத்து மாதவர் எல்லாம்-சக்கர வாளத்துள்ள அருந்தவரனைவரும்
மன்னவன் புதல்வ னிறந்த துயரத்தைக் கேட்டு, மணிமேகலைதனை இளங்கொடி அறிவதும்
உண்டோ இது என-மணிமேகலையை நோக்கி இளங்கொடியே நீ இச்செயல்பற்றி அறிந்திருக்கின்றனையோ
எனவினவ, துளங்காது ஆங்கவள் உற்றதை உரைத்தலும் - மணிமேகலை நடுங்காமல் நிகழ்ந்தவற்றைக்
கூறுதலும், ஆங்கவள் தன்னை ஆருயிர் நீங்கிய வேந்தன் சிறுவனொடு வேறிடத்து ஒளித்து
- அவளை இறந்து கிடந்த அரசிளம் புதல்வனுடன் ஓரிடத்து ஒளித்துவைத்து ;
தன்பாற் பிழையின்மையின் துளங்காதுரைத்தனள்
என்க. வேறிடத்து - வேறு மறைவான இடத்தில்.
11--8. மாபெருங்
கோயில் வாயிலுக்கு இசைத்து-மிக்க பெருமையுடைய மன்னவன் கோயிலையடைந்து வாயில்காப்போருக்குக்
கூறி, கோயின் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு - மாளிகையிலுள்ள வேந்தனுக்கு
அண்மையிற் சென்று, உயர்ந்தோங்கு உச்சி உவாமதிபோல-மிகவுயர்ந்த வானின்
நடுவேயுள்ள முழுமதியைப் போல, நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய -
மிகவுயரிய நினது வெண்கொற்றக்குடை நிலவுலகிற்குத் தண்ணிய நிழலைத் தருக, வேலும்
கோலும் அருள்கண் விழிக்க - நீ ஏந்திய வேற்படையும் செங்கோலும் அருள்நோக்க
முடையவாக, தீது இன்றி உருள்க நீ ஏந்திய திகிரி - நினது ஆணைச் சக்கரம் இடையூறின்றி
இயல்வதாக, நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிதாக வாழிய வேந்தே
- நினக்கு என்று பால்வரை தெய்வத்தான் எல்லையிடப்பட்ட ஆண்டுகளனைத்திலும்
மனத்திற்கு இனியவாக வாழ்வாயாக அரசே ;
வாயில்
- வாயில் காவலரை உணர்த்திற்று. உயர்ந்தோங்கு, நிவந்தோங்கு என்பன ஒரு
பொருட்பன்மொழிகள். செய, விழிக்க என்பன வியங்கோல்; செயவெனெச்சமாகக்
கொண்டு வாழிய வென்பதனோடு முடித்தலுமாம். வேலும் கோலும் அருட்கண் விழிக்க
என்றமையால், பகை வேறலும் குடியோம்பலும் அருளால் நிகழ வேண்டுமென்றவாறாயிற்று.
ஏந்திய என்பதனை வேல் கோல் என்பவற்றோடு கூட்டுக, மனக்கு ; அத்துச்சாரியை
தொக்கது. இனிதாக : பன்மை யொருமை மயக்கம்.
மாதவரெல்லாம் இங்ஙனம் அரசர்க்கு ஓம்படை
கூறியபின், அவருளொருவர், உதயகுமரன் கொலையுண்டமை கேட்டு அரசர்க்குச்செற்றம்
நிகழாவண்ணம் முன்பு அப் பதியிலே கழிகாமத்தால் தீங்கிழைத்துக் கொலையுண்ட
இருவர் வரலாறுகளை அரசர்க்குக் கூறுகின்றார். |