பக்கம் எண் :

பக்கம் எண் :313

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை
 

காமக்கிழத்தி. இகழ்ந்தோர்-அவமதித்த பகைவர்-எஞ்சுதலில்லோன்-வலிகுறையாதவன்; தோலாதவன். என-என்றுநினைந்து.

33--9. அரசாள் உரிமை நின்பால் இன்மையின் - அரசு புரியும உரிமை நின்னிடம் இல்லாமையால், பரசுராமன் நின்பால் வந்து அணுகான் - பரசுராமன் நின்னிடம் போர்புரியுமாறு வாரான், அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்குகிளவியின் யான் தோன்று அளவும் - கடவுண் முனிவராகிய அகத்தியரது அருண்மொழியால் யான் மீண்டு இந் நகரை அடையுமளவும், ககந்தன் காத்தல் - ககந்தனே காப்பாயாக என வுரைத்து, காகந்தி என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு - ககந்தனாற் காக்கப்படுதலின் காகந்தி என்று பொருந்திய பெயரை இந் நகருக்கு இட்டு, ஈங்கு உள்வரிக்கொண்டு அவ் வுரவோன் பெயர்நாள் - காந்தன் வேற்றுருக்கொண்டு சென்ற நாளில் ;

கணிகை மகனாதலின் அரசாளுரிமை யிலனாயின னென்க. துயர் நீங்குகிளவி-துன்பம் ஒழிதற்கேதுவாகிய சொல். ககந்தன் : அண்மை விளி. காத்தல் : வியங்கோள், காக்க ''என்று கூறி'' என வருவித்துரைக்க. உள்வரி - வேற்றுரு. இவ் வரசன் அகத்தியரை வேண்டி, அவரது கரகத்திலுள்ள காவிரிநீரைப் பெற்றனனென்பது பதிகத்தால்1 அறியப்படும்.

40--4. தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்-தெளிந்தநீரினையுடைய காவிரியில் நீராடி வருகின்ற, பார்ப்பனி மருதியைப் பாங்கோர், இன்மையின் - பார்ப்பனியாகிய மருதியைப் பக்கத்திலுள்ளோர் ஒருவரும் இல்லாமையால், யாப்பறை என்றே எண்ணினன் ஆகி - உறுதியற்றவள் என நினைந்தவனாய், காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் நீ வா என்ன - காவிரியின் கரையில் ககந்தனுடைய புதல்வன் நீ வா என அழைக்க, நேரிழை கலங்கி - அவள் கலக்கமுற்று ;

காவிரி வாயில் - சங்கமுகத் துறையுமாம். பாங்கோரின்மையின் நீ வா என்ன என்றியையும்.

45--9. மண்திணி ஞாலத்து - அணுச்செறிந்த நிலவுலகத்தில், மழைவளம் தரூஉம் பெண்டிராயின்-வேண்டுங்கால் மழையினைப் பெய்விக்கும் கற்புடை மகளிராயின், பிறர் நெஞ்சு புகாஅர் - ஏதிலார் உள்ளத்திற் புகுதலிலர், புக்கேன் பிறன் உளம்-யானோ அயலான் உள்ளத்திற் புகுந்தேன், புரிநூல் மார்பன் முத்தீப்பேணும் முறை எனக்கு இல் என - ஆகலின் முந்நூலணிந்த மார்பினையுடைய அந்தணனது முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கு இல்லை என்று மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாள் - மிகப் பெரிய துன்பத்துடன் தன் மனையின்கண் செல்லாளாய் ;


1 மணி. பதிகம் : 10-12.