|
மழைவளம் - மழையாகிய வளம் ; வளம் -
வருவாய். புக்கேன் ஆகலின் என விரித்துரைக்க. புரிநூன் மார்பன் - கணவன்.
முத்தீ - காருகபத்தியம் ஆகவனீயம் தென்றிசையங்கி என்பன. பேணுதல் - கணவற்குத்
துணையாயிருந்து அதனை வளர்த்தல்.
50--6. பூத
சதுக்கம் புக்கனள் மயங்கி-பூத சதுக்கத்தை யடைந்து வருந்தி, கொண்டோன் பிழைத்த
குற்றம்தான் இலேன் - கணவனைப் பிழைத்த குற்றமொன்றும் இல்லேன், கண்டோன்
நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் - அயலானுடைய உள்ளத்தில் எளிதல் ஒளித்தேன்,
வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் - மழையைத் தரும் கற்புடைய மகளிர்க்குரிய
இல்லறத்திற் பொருந்தினேன், யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் - நான்
செய்த குற்றம் ஒன்றையும் யானறியேன், பொய்யினைகொல்லோ பூதசதுக்கத்துத்
தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும் - அல்லவை செய்தோரைப் புடைத்துண்பாய்
என்று கூறப்படுகின்ற பூதசதுக்கதுக் கடவுளாய நீ பொய்ம்மையை யுடையாயோ என மருதி
பலவாறு புலம்புதலும் ;
பூத சதுக்கம் - பூதம் நிற்றலையுடைய சதுக்கம்
; சதுக்கம் - நாற்சந்தி. கொண்டோற் பிழைத்தல் - கற்பிற்கு மாறாக ஒழுகுதல்
கற்பின் மனையறம் - கற்புடை மகளிர் புரியும் மனையறம். குற்றந்தான் இலேன்,
மனையறம் பட்டேன், யானறிகில்லேன்: அங்ஙனமாகவும் கரப்பெளிதாயினேன்; ஆகலின்
பொய்யினை கொல்லோ? என்றாள் என்க; பிறனுளம்புக்க தன்னைப் புடைத்துண்ணாமையால்
''பொய்யின் கொல்லோ'' என்றாள். சதுக்கப் பூதத்தின் இயல்பு 1"தவமறைந்
தொழுகும்... பூதம் புடைத்துணும் பூதசதுக்கமும்" என்பதனால் அறியப்படும். மனையறம்பட்டேன்
என்பதற்கு ''இல்லறத்திற்குத் துணையாக நிற்றலை யொழிந்தேன்'' என்று பொருள்
கூறினர் டாக்டர் வே. சாமிநாதையர்.
57--8. மாபெரும் பூதம் தோன்றி - மிகப் பெரிய சதுக்கப்பூதம்
தோன்றி, மடக்கொடி நீ கேள் என்றே நேரிழைக்கும் உரைக்கும் - மடக்கொடியே
நீ கேட்பாயாக என்று அவட்குக் கூறும்
59--69. தெய்வந்தொழாஅள்
கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற-பிற தெய்வத்தை
வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை பெய்யென்று
சொல்லப் பெருமழை பெய்யும்எனவுரைத்த, அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்
- தெய்வப் புலவராகிய திருவள்ளுவனாரது அப் பொருண்மொழியைத் தெளியாயாய்,
பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு-பொருளொடு புணராப் பொய்ம்மொழிகளையும்
பொருளொடு புணர்ந்த நகைமொழிகளையும் பிறரிடம் கேட்டு, விசிபிணி முழவின்
விழாக்கோள் விரும்பி-
1
சிலப். 5; 128 - 34.
|