பக்கம் எண் :

பக்கம் எண் :322

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை
 

பட்ட ஐந்தாவன : கள், பொய், களவு, கொலை, காமம் என்பனவாதல் போதரும் கள் முதலிய நான்கினையும் காமம் தள்ளாது எனவே காம முடையோர் ஏனைய நான்கு குற்றங்களையும் உடையராவ ரென்ப தாயிற்று.

177-83.  சேரிய நெடுங்கண் சித்திராபதி மகள் - சிவந்த அரி படர்ந்த பெரிய கண்களையுடைய சித்திராபதியின் மகள், காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள் மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்-மாதவி காதலனாகிய கோவலன் இறந்த கொடிய துன்பத்தைப் பொறாதவளாய் அறவோர் சாலையை அடைந்தனள், மற்றவள் பெற்ற மணிமேகலைதான் முற்றாமுலையினள் முதிராக் கிளவியள் - அம்மாதவி பெற்ற மணிமேகலை யென்பவள் முற்றாத கொங்கையும் முதிராத சொல்லும் உடையளாகியும், செய்குவன் தவம் எனச் சிற்றிலும் பேரிலும் ஐயங்கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் - தவம் செய்வேன் என்று சிறிய இல்லங்களிலும் பெரிய மனைகளிலும் பிச்சை யேற்று உண்டு உலக வறவியை அடைந்தனள் ;

மகளாகிய மாதவி பொறாள் அடைந்தனள் எனக் கூட்டுக. முதிராக்கிளவி - இளஞ்சொல்; மழலைமொழி. முலையினளும் கிளவியளு மாகிய மணிமேகலை என்றலுமாம்.

184--9.ஆங்கவள் அவ்வியல்பினளே ஆயினும் - மணிமேகலை அவ் வியல்பினை உடையவளாயினும், நீங்கான் அவளை நிழல்போல் யாங்கணும் - அவளை எவ்விடத்தும் நிழல்போல நீங்காதவனாய், காரிகை பொருட்டால் காமம் காழ்கொள - அவள் பொருட்டுக் காமம் முற்றி, ஆரிருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் - அரிய இருளிலே அஞ்சானாய் அம்பலத்தை அடைந்தனன், காயசண்டிகை வடிவாயினள் காரிகை-மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சைமாதின் வடிவமெய்தினள், காயசண்டிகையும் ஆங்குளள் ஆதலின் - காயசண்டிகை என்பாள் முன்னர் ஆங்கு இருந்தன ளாதலால் ;

அரசனுக்குக் கடிதின் வெகுளியுண்டாகாமைப் பொருட்டு அடைந்தவன் உதயகுமரன் என்பதனை மாதவன் முதற்கண் வெளிப்படைக் கூறிற்றிலனென்க. காயசண்டிகை பசிநீங்கி வானிலே செல்வுழி விந்த மலையின் மேற்சென்று விந்தாகடிகையின் வயிற்றில் அடங்கினள் என (20: 114-21) மேல் உரைத்தமையின், ஈண்டு "ஆங்குளளாதலின் கணவனாகிய விஞ்சைய னொருவன்தோன்றி'' எனக் கூட்டியுரைத் தலுமாம்.

190--3. காயசண்டிகையின் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி - காயசண்டிகையின் கொழுநனாகிய தப்பாத வாளினையுடைய விஞ்சையன் ஒருவன் தோன்றி, ஈங்கிவள் பொருட்டால் வந்தனன் இவன் என! ஆங்கவன் தீவினை உருத்தது