ஆகலின் - காயசண்டிகை பொருட்டு இவன்
ஈண்டு வந்தனன் என்று கருத அவனது தீவினையானது சினந்து பற்றியதாதலால்;
''என'' என்பதனை, என்று கருத என விரித்துத் தோன்றி
என்பதற்கு முடிபாக்குக. ஆங்கவன் தீவினை - உதயகுமரனது தீவினை; காஞ்சனனது
தீவினையுமாம்.
194--204.
மதிமருள் வெண்குடை மன்ன-திங்கள்போலும் வெண் குடையினையுடைய வேந்தே, நின்மகன்
உதயகுமரன் ஒழியானாக - நின் புதல்வனாகிய உதயகுமரன் நீங்காதிருக்க, ஆங்கவன்
தன்னை அம்பலத்து ஏற்றி-காயசண்டிகை யுருங்கொண்ட மணிமேகலையை அம்பலத்தில்
ஏற்றுவித்து, ஓங்கிருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து - மிகுந்த இருளையுடைய இடையாமத்தில்
இவனை அவ்விடத்திற் செலுத்தி, காயசண்டிகையின் கணவன் ஆகிய வாய் வாள் விஞ்சையன்
தன்னையும் கூஉய் - காயசண்டிகையின் கணவனாகிய கூரிய வாட்படையுடைய காஞ்சனனையும்
அழைத்து, விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என வஞ்ச விஞ்சையன் மனத்தையும்
கலக்கி - அவன் மனைவியாகிய விஞ்சைமகளிடம் இவன் வந்தனன் என்று வஞ்சமுள்ள
விஞ்சையனது உள்ளத்தையும் மயக்கி, ஆங்கவன்தன் கை வாளால் அம்பலத்து ஈங்கிவன்
தன்னை எறிந்தது என்று - அவனது கைவாளினால் உலகவறவியில் இவனை வெட்டி வீழ்த்தியது
என்று, ஏத்தி மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்-மாதவருள் ஒருவன் அரசனை
வாழ்த்தி உரைத்தவளவில்;
ஒழியானாக-அம்பலத்தை விட்டு நீங்காதிருக்க.
அத்தீவினை ஏற்றி, உய்த்து, கூஉய், கலக்கி, எறிந்தது என எழுவாய் வருவித்து
முடிக்க. இந் நிகழ்ச்சிக்கு காரணம் பழவினையே யன்றி, காஞ்சனன், மணிமேகலை,
உதயகுமரன் என்பவருள் ஒருவரும் அல்லர் என்றபடியாயிற்று.
205--15. சோழிக
எனாதி தன்முகம் நோக்கி - சோழிக ஏனாதியின் முகத்தை நோக்கி, யான் செயற்பாலது
இளங்கோன்தன்னைத் தான் செய்ததனால் தகவிலன் விஞ்சையன்-இளங்கோலை யான்
செயற்பாலதனை விஞ்சையன் தான்செய்ததனால் தகுதியிலாதவனா யினான், மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்-அரசனது காவல்
இல்லையானால் தாபதர்களின் தவமும் மகளிர் கற்பும் இல்லையாகும், மகனை முறைசெய்த
மன்னவன் வழி ஓர் துயர் வினையாளன் தோன்றினன் என்பது-கன்றையிழந்த பசுவின்
துயரினைப் பொறாமல் தன் மகனைத் தேர்க்காலிற் கிடத்தி முறைபுரிந்த மனு வேந்தனின்
மரபில் ஒரு தீவினையாளன் தோன்றினன் என்னும் சொல், வேந்தர்தம் செவி உறுவதன்
முன்னம்-ஏனைய அரசர்கள் காதில் புகுவதன்முன், ஈங்கிவன் தன்னையும் ஈமத்து ஏற்றி-இவனை
ஈமத்தில் ஏற்றி, கணிகை மகளையும் |