பக்கம் எண் :

பக்கம் எண் :6

Manimegalai-Book Content
1. விழாவறை காதை
 

விசை யவுணர்...இடனுங் காண்கும்" என்பதனாலும், "முன் னாளிந்திரன் ...பூதம்" என்னும் உரை மேற்கோளாலும் அறிக. நரகர்- 1 "தவ மறைந் தொழுகுந் தன்மையி லாளர், அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர்மனை நயப்போர், பொய்க் கரியாளர், புறங்கூற்றாளர் என்னுமிவர். பூதம்-சதுக்கப்பூதம். பொருந்தாதாயிடும் - நகரை விட்டு நீங்கும் எனினுமாம். கால் கொள்க வென்று சமயக்கணக்கர் முதலாயினோர் கூறவென்க.

27--34. வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்-வச்சிரப்படை
        நிற்குங் கோயிலின்கணுள்ள விழாமுரசினை, கச்சையானைப்
        பிடர்த்தலை ஏற்றி-கச்சையை யணிந்த யானையின் பிடரினிடம்
        ஏற்றி, ஏற்று உரி போர்த்த இடியுறு முழக்கிற் கூற்றுக்கண்
        விளிக்கும் குருதி வேட்கை-வென்ற நல்லேற்றின் உரியாற்
        போர்க்க்கப்பட்டதும் இடியை யொத்த முழக்கத்தை
        யுடையதும் கூற்றுவனை யழைப்பதும் குருதிப் பலிகொள்ளும்
        விருப்பத்தினை யுடையதுமாகிய, முரசு கடிப்பிடூஉம் முதுகுடிப்
        பிறந்தோன் - வீர முரசத்தைக் குறுந்தடிகொண்டு அறைகின்ற
        தொல்குடிப் பிறந்த வள்ளுவன், திரு விழைமூதூர் வாழ்க என்று
        ஏத்தி-திருமகளும் விழைகின்ற தொன்னகர் வாழ்க என்று
        துதித்து, வானம் மும்மாரி பொழிக-மேகம் மாதம் மும்முறை மழை
        பொழிக, மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக -
        அரசன் கோள்கள் நிற்கும் நிலை குலையாமைக்குக் காரணமாகிய
        செங்கோலை யுடையவனாகுக என வாழ்த்தி ;

கச்சை - அடி வயிற்றிற் கட்டுங் கயிறு. பிடர்த்தலை - பிடரிடம். வீர முரசிற்கு வென்ற ஏற்றின் தோலை மயிர் கழியாது போர்த்தல் மரபு; இதனை'' 2 ;" மண்கொள வரிந்த வைந்துதி மருப்பின், அண்ணனல்லே றிரண்டுடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த, திண்பிணி முரசம்" என்பதனாலறிக. இடியுறு: உறு - உவமவுருபு. இடியுரும் என்னும் பாடத்திற்கு இடியேறு என்க. கூற்றுக்கண் : கண் - அசை. கடிப்பிகூஉம் என்னும் பாடத்திற்கும், இகூஉம்-அறையுமென்னும் பொருட்டாம்; 3 ;" முரசுகடிப் பிகுப்பவும்" என்பது காண்க. என்று வாழ்த்தியென விரித்துரைக்க. மூதூர் வாழ்க மாரிபொழிக கோலோனாகுக என்று ஏத்தி என்னலுமாம்; ஏத்தி-வாழ்த்தி. அரசனது கோல் கோடின் கோட்கள் நிலை திரியும் என்பது, 4 "கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்" 5 "கோணிலை திரிந்து...அரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றாலும் அறியப்படும். முதுகுடிப் பிறந்தோன் முரசம் ஏற்றி ஏத்தி
என்றியைக்க.


1 சிலப். 5: 128-31.   2 புறம். 287.   3 புறம். 157. 4 மணி. 7: 8. 5 சீவக. 255.