பக்கம் எண் :

பக்கம் எண் :7

Manimegalai-Book Content
1. விழாவறை காதை
 

35--42. தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் - நாவலந் தீவிற்குச்
        சாந்தியாகிய இந்திர விழவினைக் கொண்டாடு நாட்களில், ஆயிரங்
        கண்ணோன் தன்னோடு-ஆயிரங் கண்களையுடைய புரந்தரனோடு,
        ஆங்குள நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பின் பால்வேறு
        தேவரும் இப்பதிப் படர்ந்து-ஆண்டுள்ள நால்வகையாகப்
        பிரிக்கப்படும் முப்பத்து மூவராகிய தேவரும் நன்மைசால்
        சிறப்புடையராகிய பதினெண் கணங்களும் இந்நகரத்தினை
        நினைந்து; மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள்-கரிகாற்
        பெருவளத்தான் என்னும் மன்னர் பெருமான் இந்நகரினின்றும்
        நீங்கி வட திசையிற் போருக்குச் சென்ற ஞான்று, இந்நகர்
        போல்வதோர் இயல்பினது ஆகி-இப்பதி வறிதாகிய தன்மைபோல,
        பொன் நகர் வறிதாப் போதுவர் என்பது - பொன்னுலகம் வறிதா
        குமாறு ஈண்டு அடைவர் என்பது, தொல்நிலை உணர்ந்தோர் துணி
        பொருள் ஆதலின்-பழமையை அறிந்தோர்களால் துணியப்பட்ட
        பொருளாகலின் ;

நாவலந் தீவின் காவற்றெய்வம் முற்காலத்தில் இத்தீவிலுள்ளார்க்கு அவுணரால் வருந்துன்பத்தை ஒழித்தற் பொருட்டாக இந்திரனுக்குச் செய்தமையால் இந்திரவிழா தீவகச்சாந்தி எனப்பட்டது. 1 "நாவலோங்கிய மாபெருந் தீவினுட், காவற்றெய்வதந் தேவர்கோற்கெடுத்த, தீவகச் சாந்தி" என மேல் வருதல் காண்க. இனி, இந்நகருக்குளவாகுந் துன்பங்களை யொழித்தற்குச் செய்யப்படும் இவ்விழா தீவிற்குச் செய்வதனை யொக்கு மென்னுங் கருத்தால் தீவகச் சாந்தி யெனப்பட்டதெனினும் அமையும்; இவ்வூ ரம்பலம் "உலக வறவி" (7 : 93 ; 17 : 78, 86) என இக்காப்பியத்தும், இவ்வூர் வாயில் 2 "உலக விடைகழி" எனச் சிலப்பதிகாரத்தும் கூறப்படுதல் காண்க. நால் வேறு தேவர் - வசுக்கள் எண்மரும் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் ஆகிய முப்பத்து மூவர். பால்-பகுதி. படர்ந்து-நினைந்து. கரிகால் வளவன்-புகாரிலிருந்தரசாண்ட பெரு வீரனாகிய ஓர் சோழமன்னன் ; இவன் வடநாட்டின்மீது படையெடுத்துச் சென்ற செய்தி 3 "செருவெங் காதலிற் றிருமா வளவன்,...புண்ணியத் திசைமுகம் போகிய வந்தாள்" எனச் சிலப்பதிகாரத்து வருதலான் அறியப்படும். வறிதா-வறுமையுடையதாக; தேவர் பலரும் விழாக்காண இந்நகர்க்கு வந்துவிடுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டது.

43--45. தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்-தோரணங்
        களையுடைய வீதிகளிலும் குற்றமற்ற மன்றங்கிளிலும், பூரண
        கும்பமும் பொலம்பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன்
        பரப்புமின் - நிறைகுடங்களும் பொற்காலிகைகளும் பாவை
        விளக்குகளுமாகிய மங்கலப் பொருள் பலவற்றையும் ஒருங்கு
        பரப்புமின் ;


1 மணி. 2 : 1-3. 2 சிலப், 10-27. 3 சிலப். 5 : 60-4.