பக்கம் எண் :

பக்கம் எண் :351

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை
 

44--5.   யாங்கு ஒளித்தனள் அவ்விளங்கொடி என்றே - அவ்விளங் கொடி போல்வாள் யாண்டுச் சென்று மறைந்தனள் என, வேந்தரை அட்டோன் மெல்லியல் தேர்வுழி - பகை மன்னரை வென்ற வேந்தன் அவளைத் தேடும்பொழுது, நிலத்திற் குளித்து நெடுவிசும்பு ஏறிச் சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற-நிலத்துட் புகுந்து நீண்டவானில் இவர்ந்து நீர்மீது திரியும் ஒரு சாரணன் தோன்ற ;

நீரிற் குளித்தல்போல் நிலத்திற் குளித்து எனவும், நிலத்தில் திரிதல்போல் சலத்தில் திரியும் எனவும் விரித்துரைத்துக் கொள்க. நிலத்திற் குளித்தல் முதலியன சித்தி எனவும் இருத்தியெனவும் படும் ;1 "நீரினிற் பூவில் வானில் நினைத்துழியொதுங்குகின்ற, சாரணரெண்ம ராவார் சமணரி லிருத்தி பெற்றோர்" என்பதுங் காண்க. இனி 2 "இருநிலம் புகுதலும் ஒருவிசும் பிவர்தலும், வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும், மந்தர மேந்தலு மென்றிவை பிறவும், பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக், கண்டுமறிதும்" என்பதனால் நிலத்திற் குளித்தல் முதலியன சில வித்தைகளாதலும் பெற்றாம்.

48--53.   மன்னவன் அவனை வணங்கி முன் நின்று - அரசன் அம் முனிவனை வணக்கஞ் செய்து முன்னே நின்று, என் உயிரனையாள் ஈங்கொளித்தாள் உளள் - என் உயிர்போல்வாள் ஈண்டு நின்றும் மறைந்தாள் உளள், அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள் சொல்லுமின் என்று தொழ அவன் உரைப்பான் - அத் தன்மை யுடையாளாகிய நங்கை ஒருத்தியை அடிகள் கண்டீரோ கூறுவீராக என்று பணிய அச் சாரணன் மொழிவான், கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை-அம் மங்கையை யான் இப்பொழுது கண்டிலேன் ஆனாலும், பண்டறிவுடையேன் பார்த்திப கேளாய் - முன்னர் அவளைப்பற்றி அறிதலுடையேன் அரசனே கேட்பாயாக ; அறிவு உடையேன் - அறிதலுடையேன்.

54--9.   நாக நாடு நடுக்கின்று ஆள்பவன் - நாக நாட்டினை இடுக்கண் நீக்கி அரசு புரிவோனாகிய, வாகை வேலோன் வளைவணன்- வெற்றி பொருந்திய வேற்படையினையுடைய வளைவணனின், தேவி வாச மயிலை வயிற்றுள் தோன்றிய - மனைவியாகிய வாசமயிலை என்பாளது வயிற்றில் உதித்த, பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் - பீலிவளை எனப் பெயரிய இம் மங்கை பிறந்த அந்நாளில், இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக் கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன் - பரிதி குல மன்னவ னொருவன்பாற் கூடிக் கருப்பத்துடன் வருவாள் என்று சோதிட நூல்வல்லான் எடுத்துக்கூறினன் ;

நடுக்கு இன்று - நடுங்குதல் இல்லையாக. கணி - நிமித்திகன்.,


1 சூடா நிகண்டு. 2 ; 4. 2 பெருங்கதை. 3 - 4 : 86 - 90