பக்கம் எண் :

பக்கம் எண் :352

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை
 

60--5.   ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள் - அவள் வயிற்றில் தோன்றிய புதல்வன் வருவானே யன்றி அவள் வாராள், புலம்பல் - அதன் பொருட்டு வருந்தாதே, இதுகேள் - இதனைக் கேட்பாயாக, தீவகச்சாந்தி செய்யாநாள் உன் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம் - இந்திரவிழவினைச் செய்யாது கைவிட்ட நாளில் நினது காவலமைந்த பெரிய நகரம் கடல் வயிற்றில் புகும், மணிமேகலை தன் வாய்மொழியால் அது - அங்ஙனம் கடல்கோள் நிகழ்வதுமணிமேகலா தெய்வத்தின் மெய்ம்மொழியாலாம், தணியாது இந்திர சாப முண்டாகலின் - இந்திரனது சாபமும் உண்மையான் அது தவிராது ;

அப் புதல்வன் - அங்ஙனம் அவள் கருவில் உதித்த புதல்வன். தீவகச் சாந்தி - இந்திர விழா. மணிமேகலை - மணிமேகலா தெய்வம் அது - நகர் கடலிற் புகுவது. ஆல் என்பதனை அசையாக்கி, அதுவாய் மொழி என்றுரைத்தலுமாம். இந்திர சாபமும் என உம்மை விரிக்க

66--71.   ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்-அவ்வாறு நகரம் அழிவெய்துதலும் இவ்விடத்து அரசு கேடுறலும், வேந்தரை அட்டோய் மெய்யெனக் கொண்டு-பகை மன்னரை வென்ற பெரு வேந்தே உண்மை என்று கொண்டு, இக் காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்-குற்றமற்ற இப் பெருநகரம் கடல் வயிற்றுட் புகா திருக்கும் பொருட்டு, வாசவன் விழாக்கோள் மறவேல் என்று - இந்திரவிழாக் கொண்டாடுதலை மறவாதே என வுரைத்து, மாதவன் போயின அந்நாள் தொட்டும் - சாரணன் சென்ற அந் நாள் தொடங்கி, இக் காவன் மாநகர்க் கலக்கு ஒழியாதால் - காவலமைந்த இப் பெரிய நகரிலுள்ளார் கலக்கம் நீங்கப்பெறார் ;

ஆங்கு - அந்நாளில் என்றுமாம். ஈங்கு: அசையுமாம். மாதவன் போயினன் ; போயின அந்நாள்தொட்டு என வேறு அறுத்துரைக்க.

72--6.   தன் பெயர் மடந்தை துயருறுமாயின் - தன் பெயரினைக் கொண்ட மணிமேகலை துன்புறுவாளானால், மன்பெருந் தெய்வம் வருதலும் உண்டு என-நிலைபெற்ற பெரிய மணிமேகலா தெய்வம் தோன்றுதலும் உண்டு என்று, அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி-மன்னவன் மாதேவி! அச்சமுற்றேன் எனத் துதித்து, நன் மனம் பிறந்த நாடகக் கணிகையை என்மனைத் தருக என - நல்லுள்ளம் தோன்றிய மணிமேகலையை என தில்லத்தின்கண் தருக என வேண்ட ;

அரசன் தேவி ! அஞ்சினேன் எனத்துதித்து, நாடகக் கணிகையை என் மனைத் தருக என்று சித்திராபதி கேட்ப வென்க. நன்மனம் நன்னெறிக்கண் செல்லும் மனம்.