பக்கம் எண் :

பக்கம் எண் :378

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 
தென்மேற்றிசையின் கட்சென்று, திரைஉலாம் - அலைகள் உலாவுகின்ற, கோமுகி என்னும் பொய்கையின் கரை - கோமுகி என்ற வாவியின் கரையில், ஓர் தூமலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்பதுறையினருகே தூய மலர்களையுடைய ஒரு புன்னைமர நிழலின்கண் இருப்ப;

பீடிகையாற் பழம் பிறப்பை யணர்ந்த புண்ணியராசன் சென்ற பிறப்பிலே மதுரையிற் கலைநியமத்தில் சிந்தாதேவி அமுதசுரபியைத் தனக்கு அளித்ததனை அறிந்தானாகலின் அத்தேவியைப் பரவுகின்றான். இங்ஙனம் அவன் அமுதசுரபி பெற்ற வரலாற்றினை மேலே பாத்திர மரபு கூறிய காதையில் அறிக. ஏடா: கெழுதகைச் சொல், பவம் - கன்மக் கூட்டம். நின்னடி, நலங்கிளர் திருந்தடி என ஒருபொருண் மேல் அடுக்கிவந்தன. கழூஉம்-போக்கும். பிறவிகள் - பிறவிகடோறும், மன்னவன் ஏத்தி எழுந்து சென்று கரையில் நிழலில் இருப்பவென்க. என்னிடர் தீர்த்த; ஏடா பரியல்; என்பனவும் பாடம்.

158--67 .   ஆபுத்திரனோடு ஆயிழை இருந்தது காவற்றெய்வதம் கண்டு உவந்து எய்தி - ஆபுத்திரனுடன் மணிமேகலை கோமுகிக் கரையில் இருந்தனை மணிபல்லவத்தின் காவற்றெய்வமாகிய தீவ திலகை கண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டு அடைந்து, அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு - முற்பிறப்பில் உண்ணப்படும் அரிய உயிர் மருந்தினைக் கையகத்திற்கொண்டு, பெருந்துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை-உயிர்களின் பெரிய துன்பத்தை நீக்கிய பெரியோய் ஈண்டு வந்தாய், அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர்-அந்நாளில் நின்னை இங்குவிட்டு மறந்நு சென்றோர்கள், பின்னாள் வந்து நின் பெற்றிமை நோக்கி - பின்னாட்களில் ஈண்டு வந்து நின் தன்மையைக் கண்டு, நின்குறி இருந்து தம்முயிர் நீத்தோர் -நீ இறந்தவிடத்தில் உண்ணாநோன்புடனிருந்து தம் உயிரை விட்டோராகிய, ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவைகாண் ஒன்பது வணிகர்களின் உடல் எலும்புகளாகிய இவற்றைக் காண்பாயாக, ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவைகாண் - அச் செட்டிகள் உணவளிக்க உண்டு அவர்களுடன் வந்தோர்கள் ஏக்கமுற்று உயிர் நீங்கினோர்களுடைய என்புகளாகிய இவற்றையுங் காண்பாயாக;

ஆபுத்திரனோடு மணிமேகலை இருந்ததனைக் கண்டு அடைந்த தீவ திலகை முறைய அவ்விருவரையும் நோக்கிப் பின்வருமாறு கூறுவதாயிற்று. கண்டு வந்தெய்தி என்று பிரித்தலுமாம். உயிர் மருந்து-சோறு. அப் பெரியோய் - அத்தகு பெரியோய் குறி - இடம். போயினர், நீத்தோர், வந்தோர், வைத்தோர் வினைப்பெயர்கள். போயினவர் வந்து நீத்தார்; அங்ஙனம் நீத்தவராகிய செட்டிகள் எனவும், வந்தோராகிய வைத்தோருடைய என்பு எனவும் கொள்க.