பக்கம் எண் :

பக்கம் எண் :379

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 

168--71 .   ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப-பரந்த அலைகளால் திரட்டப்பட்ட உயர்ந்த மணல் மறைப்ப, ஆய்மலர்ப்புன்னை அணிநிழற் கீழால் - அழகிய பூக்களையுடைய புன்னை மரத்தின் அழகிய நிழலின் கீழிடமத்தே, அன்புடை ஆருயிர் அரசர்க்கு அருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய் - அன்பினையுடைய அரியவுயிரை அரசனாகிய நினக்குக் கொடுத்த என்பினாலாகிய யாக்கை இருக்கின்றதைப் பாராய்;

கீழால்: உருபு மயக்கம். ஆருயிர் என்றது விஞ்ஞான கந்தத்தை. அரசற்கு: முன்னிலையிற் படர்க்கை.

172--4 .   நின் உயிர் கொன்றாய் - நீ நின் உயிரையுங் கொன்றனை, நின் உயிர்க்கு இரங்கி - நினது உயிருக்கு இரக்கமுற்று, பின்னாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் - பின்னாளில் ஈண்டுவந்த ஏனோரின் உயிரையுங் கொன்றனை, கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை-அங்ஙனம் கொலைஞனாகவுள்ள நீ யல்லயோ அரசனாயினை என்று கூறி;

நின் உயிர்க்கு - நின்னுயிர் கழிந்தமைக்கு. பிறர் உயிர் விடுதற்குக் காரணமானமையின் ''பிறருயிர் கொன்றாய்'' என்றது. இது பழிப்பது போலப் புகழ்தலின் வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாகும்.

175--7.    பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய-பலரும் வணங்குந் தகுதியுடைய அமுதசுரபியைக் கையில் ஏந்தியுள்ள, மடவால் நல்லாய் - மடப்பம் பொருந்திய மெல்லியலே, நின்றன் மாநகர் - நின்னுடைய பெரிய நகரம், கடல் வயிறு புக்கது - கடலின் வயிற்றிற் புகுந்தது, காரணம் கேளாய்-அதன் காரணத்தைக் கேட்பாயாக; மாநகர் - காவிரிப்பூம் பட்டினம்.

178--83.    நாகநன்னாடு ஆள்வோன்தன் மகள் பீலிவளையென்பாள் பெண்டிரின் மிக்கோள்-நாகநன்னாட் டரசன் புதல்வியாகிய மகளிருள் எழில் மிகுந்தோளாய பீலிவளை என்பவள், பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய - ஞாயிற்றுப் புத்தேள் மரபில் உதித்த, புனிற்றிளங் குழவியோடு பூங்கொடி பொருந்தி - மிக்க இளமையுடைய குழவியுடன் அவளும் வந்து, இத் தீவகம் வலஞ்செய்து - இத் தீவினை வலம் வந்து, தேவர்கோன் இட்ட மாபெரும் பீடிகை வலங்கொண்டு ஏத்துழி-இந்திரனா லிடப்பட்ட பெருமை பொருந்திய இவ் வறத் தவிசினை வலஞ்செய்து துதிக்கும்பொழுது;

ஆள்வோன் - வளைவணன். பீலிவளை யென்பாளாகிய பூங்கொடி குழவியொடு பொருந்தி யென்க.

184--91.    கம்பளச்செட்டி கலம் வந்திறுப்ப - கம்பளச் செட்டியினுடைய மரக்கலம் ஈண்டுவந்து தங்க, அங்கவன்பாற் சென்று அவன் திறம் அறிந்து-அவ் வணிகனிடம் போய் அவன் காவிரிப்பூம் பட்டினஞ் செல்லுதலை அறிந்து, கொற்றவன் மகன் இவன் கொள்கெனக் கொடுத்தலும்-இவன் அரசன் புதல்வன் இவனைக்கொண்டு.