நன்னாட்டு - குற்றமற்ற மலர்சோலைகளையுடைய கலிங்கநாட்டில். தாய மன்னவர்
வசுவும் குமரனும்-ஞாதியாரகிய வசு குமரன் என்னும் மன்னர்கள், சிங்கபுரமும் செழுநீர்க்
கபிலையும் அங்காள்கின்றோர்-சிங்கபுரத்தையும் நீர்வளம் மிக்க கபிலைப்பதியையும்
ஆண்டு வருகின்றவர்கள், அடல் செருவுறுநாள் - தம்முட் பகைமையினால் வலிய போரினைச்
செய்துவருநாளில், மூவிரு காவதம் முன்னுநர் இன்றி - ஆறுகாத எல்லை முற்படுவோர்
இல்லையாக, யாவரும் வழங்கா இடத்தில் - எவரும் செல்லாத இடத்தில், பொருள்
வேட்டு - பொருளீட்டுதலை விரும்பி, பல்கலன் கொண்டு பலரறியாமல் எல்வளையாளோடு
அரிபுரம் எய்தி-பல அணிகலன்களையும் கொண்டு பலரும் அறியாமல் ஒளிபொருந்திய
வளையினையுடைய மனைவியுடன் சிங்கபுரத்தை யடைந்து, பண்டக்கலம் பகர் சங்கமன்
தன்னை - பொன்னாலாகிய அணிகலன் விற்கின்ற சங்கமனை, கண்டனர் கூற - கண்டோர்
உரைக்க, தையல் - நங்கையே, நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன்
என்னும் தீத் தொழிலாளன் - அரசன் தொழில் புரிவோனும் நின் கணவனுமாகிய
பரதன் என்னும் கொடுந் தொழிலையுடையோன், தெற்றெனப் பற்றி-விரைவாகப் பிடித்து,
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு - அரசனுக்கு இவன் மாற்றானின் ஒற்றனாவான்
என மொழிந்து, குற்றமிலோனைக் கொலைபுரிந்திட்டனன்-குற்றமற்றவனாகிய அவ்
வணிகனைக் கொலை செய்தனன்;
இது நீர்'' என்பது முதலியன,
மதுரைமா தெய்வம் தனக்குக் கூறியவற்றைப் பத்தினிக் கடவுள் கொண்டு கூறுவனவாகும்.
பயனால்: ஆல்: அசை. ''வினையின் பயன்'' எனச் சுருங்க வுரைத்துத் தெய்வம் பின்
அதனை விளங்க வுரைக்கின்றது. வசு சிங்கபுரத்தையும் குமரன் கபிலையையும் ஆள்கின்றார்
என நிரனிறையாகக்கொள்க. ஆள்கின்றோர், பெயர். அரிபுரம் - சிங்கபுரம்.
பண்டக்கலம்-பண்டு அக்கலம் எனப் பிரித்துரைத்தலுமாம். தையல்: விளி. தெற்றென
- விரைவாக, மன்னற்கு உரைத்து என்க. புரிந்திட்டனன் - புரிவித்தனன்.
29-34. ஆங்கவன் மனைவி அழுதனள் அரற்றி-அச் சங்கமன்
மனைவியாகிய நீலி என்பவள் அழுது புலம்பிக்கொண்டு, ஏங்கிமெய்பெயர்ப் போள்
இறுவரை ஏறி - ஏக்கத்துடன் பெரிய மலையின் மீதேறி விழுந்து உயிர் துறப்பவள்,
இட்டசாபம் கட்டியதாகும் - எனக்கு இம்மையில் இன்னல் புரிந்தவர் மறுமையில்
இக்கதி யுறுவாராக என்று கூறிய சாபமானது இப்பொழுது பந்தித்ததாகும், உம்மை வினைவந்து
உருத்தல்ஒழியாது எனும்-பழவினை வந்து பற்றுதல்நீங்காது என்கின்ற, மெய்ம்மைக்
கிளவி விளம்பிய பின்னும்-உண்மை மொழிகளை உரைத்த பின்னரும், சீற்றங்கொண்டு
செழுநகர் சிதைத்தேன் - சினங்கொண்டு அவ் வள நகரத்தினை அழித்தேன்;
|