|
உரை
1--4. சமயக்கணக்கர் தம் திறம்சார்ந்து-மாதவன் வடிவுகொண்டுவந்த
மணிமேகலை சமயவாதிகள் உறையும் இடத்துக்குச் சென்று, நவையறு நன்பொருள் உரைமினோ
என - குற்றமற்ற மெய்ம்ப்பொருளை யுரைப்பீராக என வினவும் கருத்தினளாய், வைதிக
மார்க்கத்து அளவை வாதியை எய்தினள்-வேதநெறியை மேற்கொண்டொழுகும் பிரமாணவாதியை
யடைந்தாள், எய்தி - அவ்வாறடைந்தவள், நின் கடைப்பிடி இயம்புஎன - நீ கொண்டொழுகும்
சமயக் கொள்கையைச் சொல்வாயாக என்று வினவ எ-று.
சமயக்கணக்கர் - சமய நுண்பொருள்களை யாராய்ந்துரைக்கும்
சமயவாதிகள். மெய்ப்பொருளை "நவையறு பொருள்" என்றும், அதன் விளைவு நன்மையாதல்பற்றி
"நன்பொரு"ளென்றும் கருதினாள். வேதத்தை மேற்கொண்டொழுகும் நெறி, வைதிகமார்க்கமெனப்பட்டது.
அளவை, பிரமாணம். கொள்கையைக் "கடைப்பிடி" யென்றார், பல்லாற்றானு மாராய்ந்து
கைக்கொள்ளப்படுதலின்.
அளவைவாதி
5--8.வேதவியாதனும் கிருதகோடியும்-வேதத்தைப் பகுத்துமுறை செய்த
வியாத முனியும் கிருதகோடி முனியும்; ஏதம்இல் சைமினி எனும் இவ்வாசிரியர் -
குற்றமில்லாத சைமினிமுனியு மென்னும் இந்த ஆசிரியன்மார்கள்; பத்தும் எட்டும்
ஆறும் - அளவைகளை முறையே பத்தென்றும், எட்டென்றும் ஆறென்றும்; தத்தம் வகையால்
பண்புறப் பகர்ந்திட்டனர் - தத்தமக்கேற்ற கூறுபாட்டின் படியே அளத்தற்குரிய
தகுதியமையக் கூறியுள்ளனர் எ - று.
இங்கே கூறிய வேதவியாதரை, வேதம்
முறை செய்தவரும் பிரம சூத்திர மெழுதியவருமாகிய வியாதரல்ல ரென்றும்,
இவர் பௌராணிகரான வியாதராக இருக்கலாமென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். கிருத
கோடி யென்பாரைப் போதாயனரென்றும் கிருதகோடிகவி யென்றும் கூறுப. சைமினி
யென்பார் மீமாஞ்சை நூலை யெழுதியவர். இவருள் வியாதர் பத்தளவையும், கிருதகோடி
எட்டளவையும், சைமினி ஆறளவையும்
|