பக்கம் எண் :

பக்கம் எண் :458

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் பக்க காதை
 

(மதுரை 662) என்றார் பிறரும். காழியர் - பிட்டு வாணிகர். கூவியர்- அப்ப வாணிகர். மைந்நிண விலைஞர் - இறைச்சி விற்போர். ஈண்டுக் கூறப்படும் வணிகர் வகையை, அடிகளும், "காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர், மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர், பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோ, டோசுநர் செறிந்த வூண்மலி யிருக்கை" (சிலப். 5. 27-4) என்பது காண்க.

34--43.  இருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் கஞ்சகாரரும்- குயவரும் செப்புக் கலஞ் செய்வோரும், வெண்கலக் கன்னாரும், பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் - பொற்பணி செய்வோரும் பொன்னை உருக்குந் தட்டாரும், மரங்கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்-மரத்தை வெட்டுந் தச்சரும், சுதை முதலி யன கொண்டு பாவை முதலியன செய்யும் சிற்ப வினைஞரும், வரந்தர எழுதிய ஓவிய மாக்களும் வரந்தருதற்குரிய கடவுள ருருவங்களையும் எழுதவல்ல சித்திரகாரரும், தோலின் துன்னரும் துன்னவினைஞரும்-தோற்பதனிட்டு உறை முதலியன செய்யும் பாணரும் தையல் வேலை செய்யும் செம்மாரும், மாலைக்காரரும் காலக் கணிதரும் - மாலை தொடுப்போரும் சோதிட நூலோரும், நலந்தரு பண்ணும் திறனும் வாய்ப்ப - சிறப்புடைய பண்ணும் திறமும் வாய்க்குமாறு, நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர்-மூவகையிடமும் கருவியும் மிடறும் ஒப்பக் காட்டும் திறனுடைய பாணரும், என்றிவர் பல்வகை மறுகும் என்ற இவர்களுடைய பலதிறப்பட்ட வீதியும்;

கோவேளென்பது பிற்காலத்தே வேட்கோவரென வழங்குவ தாயிற்று; ''''வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்'''' (பெரியபு, நீலக்கண். 1) என்பது காண்க. செய்ஞ்ஞர் என்புழி ஞகரம் பெயரிடைநிலை; அறிஞர் என்புழிப் போல. செம்பினாற் குட முதலியன செய்வோரைச் ''''செம்பு செய்ஞ்ஞ'''' ரென்றார். மரங்கொல் தச்சர், மரம் வெட்டிப் பலகை வாரை முதலிய செய்யும் தச்சர். மண்ணீட்டாளர், சுதை வேலை செய்யும் கொல்லர். வரந்தரவெழுதிய வோவியம், தெய்வப் படிமம். ஓவிய மாக்கள் சித்திரச் சிற்பிகள். நிலமாவன, வலிவ, மெலிவு, சமம் என்ற மூன்று. கலம், யாழ் முதலிய இசைக்ருவிகள். கண்டம், மிடற்றாற்பாடல். பண், நூற்று மூன்றாகக் காட்டப்படும் பண்கள். திறம், பண்ணுக்கு இன்றியமையாதன வெனக் கூறப்படும் இருபத்தொரு வகைத் திறங்கள். ''''குழலினும் யாழினும் குரல் முதலேழும், வழுவின் றிசைந்து வழித்திறங் காட்டும், அரும்பெறன் மரபின் பெரும்பா ணிருக்கை'''' (சிலப். 5. 35-7.) என்பதனால் பண்ணுந் திறமும் வாய்க்குமாறும், ''''யாழுங் குழலு மேங்கிய மிடறும் இசைவன கேட்ப'''' (சிலப். 3.50-1.) என்பதனால் கருவிப் பாடலும் கண்டப் பாடலும் பாடப்படுமாறும் காண்க.