பக்கம் எண் :

பக்கம் எண் :546

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

  எய்திற்றாக; சாதன வமூர்த்தம் மீளாது-சாதன தன்மமான அமூர்த்தத்துக்கு மீட்சியாகிய மூர்த்தத்துவம் எய்தாது அமூர்த்தத்துவமே எய்துதலால் குற்றமாயிற்று எ - று.

சத்தம் நித்தம் அமூர்த்தத்துவத்தை யுடைமையால் என்று கூறிய வாதி, இதனை விபக்கத்து வாயிலாக வைதன்மிய திட்டாந்தம் காட்டி வலியுறுத்துவானாய், விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியாக, "யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமுமன்" றென்றும், அதற்கு வைதன்மிய திட்டாந்தமாகக் "கன்மம் போல்'', என்றும் கூறுவானாயின் என்றார். நித்தமன்மையாகிய சாத்திய தன்ம மீட்சியும், அமூர்த்தமன்மையாகிய சாதன தன்ம மீட்சியும், விபக்கத் தொடர்ச்சி மொழிக்கண் எய்தியும், கன்மமாகிய திட்டாந்தத்தின்கண், அமூர்த்தத்துவமாகிய சாதன தன்மம் காணப்படுகிறதேயன்றி, அதன் மீட்சி காணப்படாமையின் "சாதனமான வமூர்த்தம் மீளா"தென்றும், கன்ம திட்டாந்தத்தில் நித்தமன்மையாகிய சாத்திய தன்ம மீட்சி காணப்படுதலால், "சாத்தியமான நித்திய மீண்டு" என்றும் கூறினார்.
 
424--9. உபயா வியா விருத்தி - உபயாவியா விருத்தியாவது; காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று - மேற்கோளை எதிர்மறை நெறியாற் சாதிப்பான் தொடங்கி வாதி காட்டும் வைதன்மிய திட்டாந்தத்திலிருந்து; சாதன சாத்தியங்கள் மீளாமை - சாதன சாத்தியங்களின் தன்ம மிரண்டின் மறுதலைத் தன்மங்கள் பொருந்தாதொழிவது; அன்றியும்-மேலும்; உண்மையின் உபயா வியா விருத்தி - உள்பொருளாகிய திட்டாந்தத்தின்கண் இரு தன்மங்களின் மீட்சி பொருந்தாமையும்; இன்மையின் உபயாவியா விருத்தி என - இல்பொருளாகிய திட்டாந்தத்தின்கண் இரு தன் மங்களின் மீட்சி பொருந்தாமையும் என; இருவகை - இருவகைப் படும் எ - று.
 
முன்னர், உபய தன்ம விகலமென்ற சாதன்மிய திட்டாந்தப் போலியை இருவகைப்படுத்துக் கூறினாராகலின், அதன் மீட்சியாகிய வைதன்மியப் பகுதிக்கண் வரும்உபயாவியாவிருத்தியையும் அவ்வாறே இரு வகைப்படுத்தி, "உண்மையின் உபயாவியா விருத்தி இன்மையின் உபவாவியா விருத்தியென விருவகை"யென்றார். இவர் உபய தன்ம விகலமாகிய சாதன்மிய திட்டாந்தப் போலியை யிருவகைப்படுத்தோதியதை மேற்கொண்டு தாமும் இருவகைப்படுத்தாதுரைத்த நியாயப் பிரவேசமுடையார், இவ்வுபயாவியா விருத்தியை அவ்வாறு இருவகைப்படுத்தாதொழிகின்றார்; "காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று சாதன சாத்தியங்கள் மீளாமை" யென்பது உபயாவியா விருத்தியின் இலக்கணம். மீளுதல், மறுதலைத் தன்மம் பொருந்த நிற்றல்.