பக்கம் எண் :

பக்கம் எண் :564

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை
 
(12:72-4) என்று முன்னரும் கூறுப. வடநூல்கள், புத்தர் தாமே நிலவுலகிற் றோன்றுதற் கெண்ணி, இடமும் காலமும் குறித்துக்கொண்டு தோன்றுவரென்று கூறுகின்றன. போதி - அரசமரம். புத்தர் பலரும் போதி மரத்தையே இருக்கையாய்க் கொள்ளவில்லை; விபாசி யென்னும் புத்தர் பாதிரி மரத்தையும், சிகி யென்பார் பூவரசினையும் கொண்டன ரெனப் பாலிமொழியிலுள்ள நூல்கள் கூறுகின்றன வென்பர். தீ நெறியிற் செலுத்தும் தேவனை மாரனென்றும், அவனுக்கு முப்பத்தாறு கோடி தானை வீரரும், இரதி அரதி திருஷணை என மூன்று பெண்மக்களும். விப்பிரமன், ஹர்ஷன், தருப்பன் என மூன்று ஆண்மக்களு முண்டென்பர். அவன் வரலாற்றை அசுவகோசர், க்ஷேமேந்திரர் முதலியோர் எழுதிய வடநூங்களுட் காண்க. வென்று: காரணப் பொருட்டு. ஆதி புத்தனுக்குப் பின்னர் பல புத்தர்கள் உளராயின ரென்றும். அவர் தொகுதியைப் புத்தசங்கமென்றும் அவர் ஆதிபுத்தன் கூறிய அறங்களை வழிவழியாய்த் தோன்றி யறிவுறுத்துவ ரென்றும் கூறுபவாதலின், "எண்ணில் புத்தர்களும் திருவாய் மலர்ந்தருளியது" என்றார். குற்ற மூன்றாவன மன மொழி மெய் மூன்றானும் உண்டாகும் பத்து வகைக் குற்றம். காம முதலிய மூன்றெனினுமாம்.

14--6. ஈரறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் - இப் புத்தன் மொழிந்த கட்டுரைப்பொருள் பன்னிரண்டுபொருள்களாகக் கூறப்படும் நெறியை யுடையதாய்; சார்பின் தோன்றி - ஒன்றினொன்று காரண காரியமாய்ச் சார்ந்து தோன்றி ; தத்தமில் மீட்டும்-தம்மில் மீளத் தோன்றுமாற்றால்; இலக்கு அணத் தொடர்தலின் - காரண காரியமா யியையத் தொடர்ந்து தோன்றுதலால்; மண்டில வகையாய் அறியக் காட்டி - மண்டலிக்கும் முறையில் வைத்து விளங்கக் காட்டி எ - று.

ஈரறு பொருளாவன: பேதைமை, செய்கை, உணர்வு. அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் எனப் பன்னிரு நிதானங்களாகும். அவை சார்பில் தோன்றலாவது பேதைமையிலிருந்து செய்கையும், அச் செய்கையிலிருந்து உணர்வும், உணர்விலிருந்து அருவுருவும், அதிலிருந்து வாயிலும், அதிலிருந்து ஊறும், அதிலிருந்து நுகர்வும், அதிலிருந்து வேட்கையும் அதிலிருந்து பற்றும், அதிலிருந்து பவமும், அதிலிருந்து தோற்றமும், அத் தோற்றத்திலிருந்து வினைப்பயனும் தோன்றுதல், செய்கைக்குப் பேதைமை இலக்கும், உணர்வுக்குச் செய்கையிலக்கும், இவ்வாறே ஒவ்வொன்றும் இலக்காய் நிற்குமென வறிக. அவ்வாறாகுமிடத்து, வினைப் பயனிலிருந்து மீளப் பேதைமையும், அதிலிருந்து செய்கையும் பிறவும் தோன்றுதலின், "இலக்கணத் தொடர்தலின்" என்றார். இவ்வண்ணம் பேதைமை முதலிய பன்னிரண்டும் ஒன்றற்கொன்று காரண காரியமாய் இடையறவின்றிக் கறங்கோலை போலச் சுழன்று தோன்றுமாறு