பக்கம் எண் :

பக்கம் எண் :41

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 
  கண்களாற் காண வியலாத சிற்றுயிர்க்கும் நடத்தலாதி தன் றொழில்களால் துன்பமுண்டாமோ எனச் செயலற்று ஏங்கி, உண்ணா நோன்போடு-உண்ணா விரதத்துடன், உயவல் யானையின் மண்ணா மேனியன் வருவோன் தன்னை- வருந்துதலையுடைய யானையைப்போல வருவோனுமாகிய கழுவாத உடலையுடைவனை, வந்தீர் அடிகள் நும் மலரடி தொழுதேன் - வாரும் அடிகேள் நும்முடைய மலர்போலும் திருவடிகளை வணங்கினேன், எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ எம்முடைய பெருமானே அடியேன் மொழியைக் கேளும், அழுக்குடை யாக்கையில் புகுந்த நும் உயிர் - அழுக்குச் செறிந்த உடலின்கட் புகுந்த நும்முடைய உயிரானது, புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது - புழுக்கத்தினைத் தரும் அறையில் அகப்பட்டோரைப்போல உள்ளம் வருந்தா வண்ணம், இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும் தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது-எம் தலைவருரைத்ததாகிய இம்மை யின்பத்தினையும் மறுமை யின்பத்தினையும் முடிவில்லாத முத்தி யின்பத்தினையும் தன்னிடத்திருந்து தருகின்றதான, கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின் - சொழுவிய மடல்களையுடைய தென்னையின் கண் விளைகின்ற இனிய மதுவில் கொலையென்பதும் உண்டோ?, மெய்த் தவத்தீரே - உண்மைத் தவமுடைய அடிகளே, உண்டு தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் - இதனை உண்டு தெளிவு பெற்று இத் தவநெறியில் இதனின் மிக்க பயனைக் கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்மென - தேறலையன்றி எம்மையும் அகற்றிவிடும் என்று கூறி, உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று - உண்ணா நோன்பியாகிய சைன முனிவருடன் சபதங் கூறி, உண்ம் என் இரக்கும் ஓர் களிமகன் பின்னரும் - உண்ணும் என்று இரக்கின்ற ஒரு கட்குடியன் பின் நிற்போரும் ;

சிமிலி-உறி. கரண்டை - கரண்டகம்; குண்டிகை; 1"கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி" என்பது காண்க. அராந்தாணம் - அருகத்தானம். வந்தீரடிகள், எந்தமடிகள், மெய்த்தவத்தீர் எனக் களிமகன் பலகாற் கூறுவது இகழ்ச்சி. மண்ணா மேனியன் ஆகலின் அழுக்குடை யாக்கை என்றான். தலைமகன்- ஆசான். கொலையுமுண்டோ என்றது கொலையொன்றுமே கடியற்பாலதென்பதனை உடன்பட்டபடி. தெங்கின் விளைபூந் தேறல் என்றது தேறலின் தூய்மை கூறியபடியாம். இவ் யோகத்து - நும்முடைய தவத்தில். இதனினும் உறுபயன் என விரிக்க. இனி, யோகம் - தேறலின் சேர்க்கை யென்றுமாம் : இதற்கு, கண்டால் அகற்றும் என்றது கண்டபின் அகற்றகில்லீர் என்னும் குறிப்பிற்று. கையுதிர் கொள்ளுதல்-கையை.

1 மதுரை, 482-3.