பக்கம் எண் :

பக்கம் எண் :54

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை

  அவிழ்ந்த வெள்ளிய மகரந்தப் பொடி அளைந்த மணம் பொருந்திய இத் தாமரை மலரைக் காண்பாயாக ;

மாதர் - அழகு. 1"கோடுடை தாழை" என்னும் பாடத்திற்குச்
சங்கு உடைந்தாற் போலும் தாழையின் மடல் என்க ; வால் வெண் : ஒரு பொருளிருசொல் ; தூய வெள்ளிய என்றுமாம் ; 2"ஊர்தி வால் வெள் ளேறே" என்பது காண்க. இது மலர் எனக் கூட்டி இம் மலர் என உரைக்க.

19--26. மாதர் நின்கண் போது எனச் சேர்ந்து தாது உண் வண்டினம் மீது கடி செங்கையின் - நின்னுடைய அழகிய கண்களை நீலமலரென நினைந்து தாதுண்ணுமாறு அடைந்த வண்டினங்களை அகற்றுகின்ற நின் சிவந்த கையைப்போல, அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு எறிந்து - மலர்ந்த தாமரை மலரிலே பாய்ந்து பிறழ்வனவாகிய செங்கயல்களைக் கண்டு அழகிய சிறகு விரியுமாறு அப்பொழுதே பாய்ந்து, அது பெறாஅது இரை இழந்து வருந்தி - அம் மீன்களைப் பெறாமல் இரையை இழந்து வருந்தி, மறிந்து நீங்கு மணிச்சிரல் காண் - மீண்டும் நீங்குகின்ற நீலமணிபோலும் சிச்சிலியைகை காண்பாயாக ; என - என்று சொல்லி, பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட - சுதமதி பொழிலையும் பொய்கையையும் காட்டாநிற்க, மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி - மணிமேகலை அப் பூம்பொழிலின் வளத்திளைக் காணும்பொழுது;

அஞ்சிறை விரிய எறிந்து எனவியையும். அது, சாதியொருமை ;
பிறழ்வனவென மேல் வந்தமையின். இரை இழந்து - பெறாமையால் அவ்விரையை யிழந்தென்க. மணி - நீலமணி ; 3"புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்" என்பது காண்க. சிரல் - சிச்சிலிப்புள் ; இது மீன் கொத்தி யென்றும் கூறப்படும். முகம் தாமரைக்கும், கண் செங்கயலுக்கும், கை சிரலுக்கும் உவமம் ; 4"பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃதுவம மாகும்" என்பதனால் பொருள்கள் உவமமாகக் கூறப்பட்டன. பொய்கை வனத்தின் உறுப்பாகலின், வனங்காண்புழி யென அதிலடக்கிக் கூறினர்.

27--8. மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன் - திங்களை யொத்த வெண்குடையையுடைய அரசன் புதல்வனாகிய உதயகுமரன் ;

மருள் : உவமவுருபு ; 5"மதிமருள் வெண்குடை" என்பது புறம்.
மன்னவன் - சோழன்.

1 சூளா- நாடு : 14.      2 புறம், கடவுள் வாழ்த்து.      3 சிறுபாண். 181.
4 தொல். உவம. 9.      5 புறம், 174.