பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 61
61

4. குமரிநாட்டில் தோன்றிய தமிழ் சமற்கிருதத்திற்கு முந்தியது.

5. உத்தரம் தக்கணம் என்னும் நாட்டுப்பெயர்கள் அல்லது திசைப் பெயர்கள், தமிழரும் அவர் வழியினரான திரவிடரும் தொன்று தொட்டு வாழும் நாவலந் தேயத்திலன்றி, வேறெவ்வாரிய நாட்டிலும் என்றேனும் வழங்கிய தில்லை.

கடவுள் வழிபாடின்றிக் கதிரவன் வணக்கத்தையே சிறப்பாகக் கொண்ட வேதஆரியர், இந்தியாவிற்குட் புகுந்தபின்னரே, காலைக் கதிரவ வணக்கத்தின் போது தக்கணம் வலப்புறமும் உத்தரம் இடப்புறமும் இருத்தல் கண்டு, அவ் விருதிசைப் பெயர்கட்கும் முறையே வலம் இடம்எனப் பொருள் கொண்டிருத்தல் வேண்டும்.

"கிழக்கு" முதலிய முன்றோன்றிய நாற்றிசைப் பெயரும் உலக வழக்கில் ஆழ ஊன்றிவிட்டதனால், ''குணக்கு'' (குணம்) முதலிய பிற்றோன்றிய நாற்றிசைப் பெயரும் செய்யுள் வழக்கென்னும் இலக்கிய வழக்கிலேயே இடம்பெறலாயின.

உலக வழக்கிலின்மையாலும் பொய்யுடை வடவர் சொல் வன்மையினாலுமே, உத்தரம் தக்கணம் என்னும் இரு தென் சொற்களும் வட சொல்லெனும் மயக்கத்திற்கு இடமாயினவென, இக் கட்டுரையினின்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க.

முதல்தரம், கடைத்தரம், தரம், கீழ்த்தரம், நடுத்தரம், இடைத்தரம், சிறுதரம், பெருந்தரம், என்பன போன்றதே உத்தரம் (உயர்ந்த நிலை) என்னும் வழக்கும் என்க. வடமொழியாளர் இவ் வடிவை உறழ்தரம் (comparative degree) ஆக்கிக் கொண்டனர். அதனால் உத்+தர (ud+tara) என்று பகுப்பர். அதுகண்டு மயங்கற்க.

முரட்டுக் குறுக்குப் பெருமரம் உத்தரம் என்று பெயர்பெற்றிருத்தலையும் நோக்குக.

 
மதுரை எழுத்தாளர் மன்றம்
16ஆம் ஆண்டுவிழாச் சிறப்புமலர் 1974