எ - டு : தொழுதி - தொகுதி. முழை - முகை.
இங்ஙனமே, நுழு, புழு, முழு முதலிய ழகர உயிர்மெய்யீற்றுச்
சொற்களும் ககர வுயிர் மெய்யீற்றினவாய்த் திரிந்திருத்தல் வேண்டும்.
முள் - முழு - முகு, நுள் - நுழு - நுகு,
முள் - முளை. முளைத்தல் = தோன்றுதல்.
நுழுந்து = இளம்பாக்கு. நுழாய் = இளம்பாக்கு.
ஆயிரக்கணக்கான பழந்தென்சொற்கள் அழிந்துபோயினமையால்,
பல கருத்துகளை இணைக்கும் அண்டுகளை எல்லா மொழிமுதல் அடிகட்கும் காட்டமுடிந்திலது.
(6) வடமொழியிற் பிற சொல்லிருத்தல் : :
முகத்தைக் குறித்தற்கு ஆனனம், வதனம், முதலிய பிறசொற்கள்
வடமொழியிலுள.
(7) தென்மொழியிற் பிற சொல்லின்மை :
தென்மொழியில் முகத்தைக் குறித்தற்குத் தொன்றுதொட்டு
வழங்குவது முகம் என்னும் சொல் ஒன்றே.
(8) தென்சொல் வளம் :
இலை, தாள், தோகை, ஓலை என ஒரே, நிலைத்திணைச் சினையை
நால் வகைப்படுத்தவும், வடு (மா), மூசு (பலா), கச்சல் (வாழை) என முக்கனி கட்கும் பிஞ்சுநிலையில்
சிறப்புச்சொல் வழங்கவும் தெரிந்த மதிமாண் பண்டைத் தமிழர்க்கு முகத்தைக் குறித்துச் சொல்லில்லை
யென்பது, பகுத்தறி வுடையார்க்குக் கூறும் கூற்றன்று.
(9) வடமொழியில் தென்சொலுண்மை :
ஆயிரக்கணக்கான தென்சொற்கள் வடமொழியில் வெளிப்படையாய்
வழங்கிவருவதால் வடமொழி தென்சொல்லைக் கடன் கொள்ளாதென்னும் பித்தர் கூற்றை எள்ளி
யிகழ்க.
(10) மேலையாரியத்தில் முகம் என்னும்
சொல்லின்மை :
மேலையாரிய மொழிகளுள் ஒன்றிலேனும் முகம் என்னும் சொல்லின்மையால்,
முகம் என்பது தென்பாலி முகத்துத் தோன்றிய தென் சொல்லேயென ஓங்கி அறைக.
|
பொய்யுடை
யொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே
மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற்
பொய்போ லும்மே பொய்போ லும்மே.
|
|
|
|
- தமிழ்ப்பொழில், ஆவணி 1958
|
|