வள்ளுவன் என்னும்
பெயர்
வள்ளுவன் என்னும் பெயர் ஒரு குலத்தையும், திருக்குறள் ஆசிரியராகிய
திருவள்ளுவரையும் குறிப்பதாகும். இவற்றுள் குலத்தைக் குறிப்பதற்குக் காரணத்தையே ஆராய எழுந்ததிக்
கட்டுரை. திருக்குறளாசிரியரைக் குறிப்பதற்குக் காரணம் அடுத்த இதழில் ஆராயப்படும்.
வள்ளுவன் எனும் பெயர் முதன்முதல் பறையருள் ஒரு பிரிவாராய்
அரசன் ஆணையை அவரது நகர மக்கட்கு யானை மீதேறிப் பெரும்பறை (பேரிகை) யறைந்தறிவிக்கும் விளம்பரத்
தலைவனைக் குறித்தது. இத் தலைவன் அரசாணையை மக்கட் கறிவிக்கும் அளவில் இற்றை விளம்பர மந்திரி
போல்வன்.
வள்ளுவர் பறையர் குலத்தொரு பிரிவினரென்பது, அவரது பறையறையும்
தொழிலாலும், வள்ளுவப் பறையன் என்றோர் சொல்லுண் மையாலும், இக் காலத்தும் அவர் பறையரினும்
உயர்ந்தவராயிருப்பினும் பிற உயர் குலத்தாரால் இழிவா யெண்ணப்படுவதாலும் பறையர்க்குக் குருவாயிருப்பதாலும்
அறியப்படும்.
பண்டைக்காலத்தில் குலப்பிரிவினை பிற்காலத்திற்போல்
மிகக் கொடிதாயிராமையானும், வள்ளுவர் அரசர் வினையைச் செய்து வந்தமையாலும் அவர்க்கு இழிவு
இருந்திலது. இது முந்திய இதழிற் கூறிய பாணர் என்னும் கட்டுரையாலும் அறியப்படும்.
அச்சு வித்தை மிகச் சிறந்து பத்திரிகைகளாலும் துண்டறிக்கைகளாலும்
விரைந்து செய்தி பரப்பும் இக்காலத்தும், வேத்தியல், பொதுவியல் ஆகிய இருவகைச் செய்திகளையும்
பறையறைந்து விளம்பரஞ் செய்யும் வழக்கு வீழ்ந்திலது. பண்டைக்காலத்தில் பறையறைதலொன்றே
செய்தி பரப்பும் சிறந்த வாயிலாகும். இதனால், பறையறைதல் என்னும் தொழிற்பெயருங்கூட விளம்பரத்தைக்
குறிப்பதாகும். "நாக்கடிப்பாக வாய்ப்பறையறைந்து சாற்றக் கேண்மின்" என்றார் கபிலரும்.
பொது மக்கட்குப் பறையறைபவர் அல்லது விளம்பரஞ் செய்பவர்
பறையரெனும் பொதுப் பெயராலும், அரசர்க்கு அவ் வினைகளைச் செய்பவர் வள்ளுவர் எனும் சிறப்புப்
பெயராலும் அழைக்கப்பட்டனர். ஒரே வினையை, அது எத்துணை இழிந்ததாயினும், அரசர்க்குச் செய்பவர்
உயர்வதும்,
|