பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 88
88

மக்கட்குச் செய்பவர் இழிவதும் எந்நாட்டிலும் இயல்பாம். உதாரணமாக, அரசர்க்கு மயிர்வினை செய்பவன் சாதாரண அம்பட்டரினும் உயர்வா யெண்ணப்படுவான். அவர் பொதுமக்கட்கு வினை செய்வதும், அங்ஙனம் செய்பவருடன் உறவு கலப்பதுமில்லை; தன்போன்ற பிற அரச அம்பட்டருடனேயே கொள்வினை கொடுப்பனையும் வைத்துக்கொள்வான். இங்ஙனமே பொதுக்குலமான பறையரினின்றும் வள்ளுவர் தனிக்குலமாகப் பிரிய நேர்ந்தது.

பண்டை நூல்களில் வள்ளுவன் தொழில் அரசராணையைப் பறையறைந்தறிவிப்பதாகவே கூறப்பட்டுள்ளது.

"வள்ளுவார் முரசமூதூ ரறைகென வருளினானே" என்றார் சீவகசிந்தாமணியாசிரியர் திருத்தக்கதேவர் (செய். 2149). இதில் வள்ளுவர் என்பது இசைபற்றி வள்ளுவார் என நீண்டது. இனி வள்ளுவன் என்னும் பெயரின் மூலத்தை ஆராயினும் அது பறையறையும் தொழிலுக்கு ஏற்ற பொருளையே தராநிற்கும்.

வள்ளுவன் எனும் சொல் வள் என்னும் மூலத்தினின்றும் பிறந்தது. வள் என்பது பறைக்கு வேண்டிய தோலையும் வாரையும் அவற்றாற் செய்யப்படும் பல பொருள்களையுங் குறிப்பதாகும்.

வள் = வார் (சூடாமணி நிகண்டு)

வள் = வாளுறை (அகராதி நிகண்டு)

வள் = கடிவாளம் (அகநானூறு. 4)

வள் என்னும் மூலம் புவ்வீறு பெற்றும் இப் பொருள்களை உணர்த்தும்.

  வள்பு தெரிந்தூர் மதிவலவநின்
புள்ளியற் கலிமாப் பூண்ட தேரே
(486)

என ஐங்குறுநூற்றில் கடிவாளத்தையும்,

  மாசற விசித்த வார்புற வள்பின் .......... உருகெழு முரசம் (50)

எனப் புறநானூற்றில் வாரையும் வள்பு என்னும் சொல் குறித்தது.

வள் என்னும் மூலத்தினின்றும் பிறந்த வள்ளுரம் என்னுஞ் சொல் தோலின் இனப்பொருளான ஊனை (மாமிசத்தை)க் குறிக்கும்.

வள் என்னுஞ்சொல் உகரச்சாரியையும் அன் ஈறும் பெற்று வள்ளுவன் என்றாயது.

வள்ளுவன் அரச சம்பந்தமான தொழிலைச் செய்பவனாதலின், பிங்கல நிகண்டில்,

  வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் அரசர்க்
குள்படு கருமத் தலைவர்க் கொன்றும்