பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

114

சான்று : “பின்”. பெயரெச்சங்களைப் ‘பின், முன், கடை, கால், இடத்து’ முதலான பெயர்ச்சொற்கள் தொடரும்பொழுது, அவை ஒரே தொகுதியாக நின்று, பிற மொழிகளில் காலங்கருதி வரும் வினையடைகள் எனப்படுவனவற்றைச் சுட்டும். அடைத்தொகையின் அடையையும் பெயரெச்சத்தையும் பெயரெச்சத்துக்கும் பெயருக்குமிடையே ஏற்படுத்தப் பெறும் இடையீடு வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆனால் முன்பு கூறியதுபோல வினையெச்சம் காலங்காட்டும் வினையடையாக வரும்பொழுது பெயரெச்சமானது காலங்காட்டும் சொல்லுடன் இடையீடின்றித் தொகையாகிவிடுகிறது. இப்படித் தொகையான தன்மை இரண்டாவது சொல்லின் மொழி முதல் வெடிப்பொலி இரட்டித்து வருவதால் சுட்டப்பெறுகிறது. சான்று: வந்த + கால் > வந்தக்கால். ‘If’ என்ற பொருளைக் குறித்ததான புதியதொரு சிறப்புத்தன்மை இங்குத் தோன்றுகிறது. கூறியபின் என்பதற்குக் “கூறிய சமயத்தில்” என்று மட்டும் பொருள்பட்டால் அது பெயரெச்சமும் பெயர்ச்சொல்லும் கூடியது என ஆகும். ஆனால் இதற்குக் “கூறியதற்குப் பின்னால்” அல்லது “கூறியிருந்தால்” எனப் பொருள் கொண்டால், இத்தொடர் வினையெச்சமாக முன் சொன்ன பெயரெச்சம் + பெயர் என்றல்லாமல் தொடராக ஒரு சொல் நீர்மைப்பட்டுவிடுகிறது. தமிழ் ஒட்டு நிலை மொழியாக இருப்பதால் இத்தகைய சொல்லாக்கங்கள் தமிழில் எளிமையாக அமைந்து விடுகின்றன.

‘செயற்கு’ என்பதும் இத்தகையதொரு தொகையாகும். செயல் என்பதைத் தொழிற்பெயர் எனக் கொள்ளலாம். அல்லது பழைய பயனிலை என்றும் கொள்ளலாம். தொல்காப்பியர் காலத்தில் நான்காம் வேற்றுமை உருபாக ஏற்கப்பட்ட ‘கு’ என்னும் இடைச்சொல்லுடன் இது வருகிறது. ‘செயற்கு’ என்பது ‘செய்யவேண்டும் என்னும் நோக்கத்திற்காக’ எனப் பொருள்படும். ‘கு’ என்பதைத் தனி உறுப்பாகக் கொள்ளாது விடின், முழுச்சொல்லும் வினையெச்சமாக - சேனாவரையர் விளக்கியுள்ளது போல நோக்கத்தைக் காட்டும் வினையடையாக - வரும்22.

‘செயின்’ என்பது ‘செய்ய வேண்டுமாயின்’ எனப் பொருள்படும். இதில் உள்ள ‘இன்’ என்பது ‘இல்’ என்பதன் பழைய மாற்றுவடிவமாக இருக்கலாம். மேலே விளக்கப்பட்ட ‘வந்தக்கால்’ என்பதைப் போன்ற அமைப்பு உடையதே ‘செயின்’ என்பதுமாகும் ‘செயின்’ என்பதின் வேரான ‘செய்’ என்பது ‘வந்தக்கால்’ என்பதிலுள்ள ‘வந்த’ என்பதற்கு இணையானதாகும்.


22. தொல்காப்பியம், 235 ஆவது நூற்பா, சேனாவரையர் உரை