பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

115

‘வந்தக்கால்’ என்பதிலுள்ள ‘வந்த’ என்பது, ‘செய்’ என்பதைப் போல வேர் என்ற நிலைக்குக் குறைக்கப்பட்டுவிட்டதையும் விளக்க வேண்டும். துணை வினைகள் ( Auxiliary verbs) எச்சங்களுடன் வருமாயின் பிந்தியன வேராகவே திகழும் என்பது முன்னரே விளக்கப்பட்டது. ‘செயின்’ என்பது நிபந்தனையாகவும் எதிர்காலம் காட்டுவதாகவும் மட்டுமே வரும். எனவே இறந்தகாலம் காட்டுவது நீங்கலாக ஏனைய பொருள்களுக்கும் வந்தக்கால் என்பது போன்ற வடிவங்கள் பயன்படலாயின. தமிழ்ச் சொற்களஞ்சியம் குறிப்பிடும் 9, 10, 11, 12 ஆவது வினைவிகற்பங்கள் ‘செயின்’ வாய்பாட்டில் வரும்பொழுது வேரானது ‘பு + இன்’ வருகின்றது. சான்று: ‘நடப்பின்’.

‘பு’ என்பது சொல்லாக்க விகுதியாகும். பின்னர் இது பெயர்ச்சொல்லின் வினையாக்க விகுதியாக ஏற்கப்பட்டது. ‘நடப்பு’ என்பதன் ஏழாம் வேற்றுமை வடிவம் ‘நடப்பின்’ என்பதாகும். சேனாவரையர் சொல்லாக்க விகுதியாகப் புகரத்தை மட்டுமே குறிப்பிடுகிறார். ஆனால் ‘செய்யும்’ வாய்பாட்டில், வேர்கள் குகரத்தைச் சொல்லாக்க அசையாகப் பெறுகின்றன. சான்று: நடக்கின். குகரம் இடம் பெறும் வடிவங்களைச் சேனாவரையர் குறிப்பிடவில்லையாதலால் அவை கிளை மொழி மாற்றங்களாக இருந்திருக்க வேண்டும். அல்லது புகரத்தை விடக் குகரத்தின் வழக்காறு குறைவாக இருந்திருக்க வேண்டும். குகரத்தைப் போலப் புகரமும் சொல்லாக்க விகுதியே என்பதை இது காட்டும்.

‘செய்பு’ என்னும் வாய்பாட்டை அடுத்து ஆராயலாம். மேலே ஆராயப்பட்ட புகரச் சொல்லாக்க விகுதியுடன் கூடிய வேரின் வடிவத்தை இது ஒத்துள்ளது. இங்குப் புகர விகுதியானது வேர்களின் எல்லா வினைவிகற்பங்களிலும் வருகிறது. முன்னரே குறிப்பிடப்பட்டது போலப் புகரம் இறப்பு அல்லாத காலத்தைக் காட்டப் பயன்படுகிறது. புகரம் நிகழ்காலம் காட்டுவதாகச் சேனாவரையர் கொள்கிறார்.23 ‘இறப்பு அல்லாத காலம்’ என்பது நிகழ்காலம் அல்லது எதிர்காலத்தைக் குறிக்குமாதலால் இங்குக் கூறப்பட்டதில் முரண்பாடு எதுவும் இல்லை.

பண்டைக் காலத்தில் வியங்கோள் வினை மூவிடங்களுக்கும் பொது வழக்காக இருந்ததை முன்னரே கண்டோம்.


23.தொல்காப்பியம், 713.