பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

152

உரியதாக வரையறுத்துக் கொள்கிறார்.21 மொழியிறுதியில் மெல்லின மெய்கள் மயங்கி வருவதை ‘போன்ம்’ என்ற ஒரு சொல்லுடன் மட்டுமே அவர் வரையறை கொள்ளும் பொழுது, ‘மொழியிடை உகரம் சிலவிடங்களில் மறையலாம்’ என்ற விதி (‘போன்ம்’ என்னும் சொல் தவிர) மெல்லின மெய் மயக்கங்கள் மொழியிறுதியில் தோன்ற வழிவகுக்குமாயின் பின்பற்றப்படுவதில்லை என்றே பொருள். ஆனால் விதிவிலக்கே பின்னர் விதியானது ஆயினும் அவ்விதி கட்டாயமான விதியன்று.

வருகைமுறை

உயிர்களின் வருகை முறையே சகர யகர மொழிகள் மொழி முதலில் அகரத்துடன் வரும் என்பதைக் காட்டுகின்றன. யகர மெய்யுடன் பிற உயிர்களும் வருகின்றன. ஓலைச்சுவடிகளில் காணப்பெறும் வழக்குகளை உண்மையெனவே கொள்வோமாயின் சில சமயங்களில் குகரமாக எழுதப்பட்ட ஆய்தம் தனியொலியாகக் கொள்ளப்பட்டது எனக்கொள்ள வேண்டும். சான்று : அஃதை > அகுதை.22 பிற்காலத்திய சுவடிகளில் - பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலும் கூட - ஆய்தத்தின் மூன்று புள்ளிகளும் இணைக்கப்பட்டுக் கூ என்னும் வடிவத்தைத் தரும் வகையில் எழுதப்பட்டது. எனவே இம்மாறுதல் சங்ககாலத்திலேயே ஏற்பட்டதா என்பதைப் பற்றி நிச்சயமாக ஒன்றும் சொல்லமுடியாது. தம் காலத்திய முறைக்கு ஏற்ப எழுதும் பழக்கத்தின் விளைவாகவும் இது இருக்கலாம்.

2 உருபனியல்

2. 1 வினைகள் : பொது

குகைக் கல்வெட்டுக்களின் மொழி பற்றி ஆராய்கையில் வினைகளின் உருபனியல் பற்றிக் குறிப்பிடப்பட்டது. குகைக் கல்வெட்டுக்களின் தமிழையே தொல்காப்பியத் தமிழ் நினைவூட்டுகிறது. சங்ககாலத் தமிழுக்கு இது பொருந்தும்.


21. தொல்காப்பியம் 723

“அவற்றுள்
செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடுங் கெடுமே ஈற்றுமிசை உகரம்
அவ்விடன் அறிதல் என்மனார் புலவர்”.

22. புறநானூறு 347 - 5

“மணம் நாறு மார்பின், மறப்போர் அகுதை”.