பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

195

ஆ. நற்றிணை

சங்கத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் ‘ஆகின்றது’ என்பது வருகிறது.

ஆகின்றது > ஆகின்று + அது

இங்கு ‘அது’ என்பது அடுத்த வாக்கியத்தின் எழுவாயாகலாம்: ‘அது - ஐய நின் நட்பு’. முன்பு எடுத்துக் காட்டப்பட்டதுபோல எழுவாய் பல இடங்களில் வாக்கியத்திற்கு இறுதியில் வந்தது. இப்படி வருவன இடப்பெயர் விகுதியுடன் கூடிய முற்று வடிவங்களாக வளர்ச்சியுற்றன. ‘ஆகின்றது’ என்பது இக்காலத்திய நிகழ்கால அஃறிணை வடிவம் போன்றே உள்ளது. உரையாசிரியர்களால் விளக்கப்பட்டதுபோலச் ‘செய்கின்று’ என்னும் வடிவத்தை நிகழ்காலம் காட்டுவதாகக் கொள்ளத் தடையில்லை என்பது தெளிவு. ‘போகின்று’ என்பது போன்ற வடிவம் குற்றியலுகரத்தை உடைய வேரிலிருந்து வருவதாம். இவற்றிலெல்லாம் உள்ள ‘இன்’ விகுதி இறந்த காலம் காட்டுகிறது.

சான்று : ஓடு + இன் + து > ஓடின்று

குகரச் சொல்லாக்க விகுதியை உடைய வேர்கள் இல்வாய்பாட்டில் வரும்.

போகு + இன் + து > போகின்று
ஆகு + இன் + து > ஆகின்று

இவை இறந்த காலத்தையும் குறிக்கின்றன. ‘வந்தது’ என்பது போன்றவற்றின் ஈற்றுருபான ‘அது’ என்பது நீக்கப்பட ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகிய ‘வந்து’ என்பது கிடைக்கிறது. இவ்ஒப்புமையாக்கத்தின் அடிப்படையில் ‘செய்கின்றது’ என்பது ‘செய்கின்று’ எனப் பின்னோக்கி அமைகிறது. ‘செய்கின்று’ என்பது நிகழ்கால வினையெச்சமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது இப்பொழுது வழக்கில் இல்லை. பெயரெச்ச விகுதியான அகரம் இதனுடன் சேர்க்கப்பட ‘செய்கின்ற’ என்ற வடிவம் கிடைக்கிறது. இது தொல்காப்பியர் காலத்தே இல்லாத ஒன்றாகும். ஆனால் இது திருக்குறள், பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றில் இடம் பெறுகிறது. இப்பெயரெச்சத்துடன் இடப்பெயர் விகுதிகள் சேர்க்கப்படப் பல்வேறு வினைமுற்றுக்கள் கிடைக்கின்றன.