பக்கம் எண் :

4
 

தமிழ் மொழி வரலாறு

209

4. 1 2. 1. இ. நிபந்தனை அல்லது வரைவுப் பொருள் வினையெச்சம்

இக் கிளைமொழியில், ‘செய்தால்’ என்னும் நிபந்தனைப் பொருள் தரும் வடிவத்திற்குப் பதில் ‘செய்கின்றால்’ என்ற மற்றொரு வடிவமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிகழ்கால விகுதியான ‘கின்ற’ என்பது இங்கு இருப்பது குறிக்கத்தக்கது. ‘நீர் ஆடுகின்றால்’ என்பதையும் நோக்குக. ‘செய்து’ என்னும் இறந்தகால வடிவத்திலிருந்து ‘செய்தல்’ வருவது போல, ‘நடப்பு’ என்னும் இறப்பு அல்லாக் காலங் காட்டும் வடிவத்திலிருந்து ‘நடப்பின்’ என்பது வருவது போல, ‘செய்கின்று’ என்னும் நிகழ்கால வடிவத்திலிருந்து ‘செய்கின்றால்’ என்பது வருகிறது. ஆனால் நிபந்தனையைக் காட்டுவனவற்றில் காலம் குறிக்கப்படுவது இல்லை. பிற இடங்களில் காணப்படாத பழைய வினையெச்சமாகிய ‘செய்கின்று’ என்பது இங்குக் கிடைக்கிறது.

4. 1. 2. 1. ஈ.

செய்தால் + உம் என்பது வினையெச்சமாக வளர்ச்சியுறுகிறது. “அது செய்யப்பட்டிருந்தாலும் கூட” என்னும் பொருளில் இது வருகிறது.

4. 1. 2. 1. உ

‘செயலும்’ [செய் + அல் (தொழிற் பெயர் விகுதி) + உம்] என்பது வினையெச்சமாக வளர்ச்சியுறுகிறது. ‘செய்து முடிந்த உடன்’ என்னும் பொருளில் இது வருகிறது. இதனது ஆட்சி சங்க காலத்திலேயே தொடங்குகிறது எனினும் பிற்காலத்திலேயே வழக்கு மிகுகிறது.16

4. 1. 2. 1. ஊ. ஒப்புமை

ஒப்புமைகள் ஒரு தொடரால் குறிக்கப்படுகின்றன. இத்தொடரில் ஒப்புமைக்குரிய பொருள் எழுவாயாக வரும். எப்பொருளோடு ஒப்பிடப்படுகிறதோ அப்பொருள் செயப்படு பொருளாக வரும். மேலும் ‘காட்டு’ அல்லது ‘பார்’ என்னும் வேர்ச்சொல் நிபந்தனை சுட்டிய வடிவமாக மாற்றப்பட்டுப் பின்னர் ‘உம்’ விகுதி சேர்க்கப்பெற்று வரும்.

சான்று : “இது அதைப் பார்க்கிலும் நல்லது”.

“இது அதைக் காட்டிலும் நல்லது.”


16. தொல்காப்பியம், 74, சேனாவரையர் உரை.