பக்கம் எண் :

என
 

தமிழ் மொழி வரலாறு

226

என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்ததாகக் கால்டுவெல்லும் பிறரும் கூறுகின்றனர். ஆனால் இக்கூற்றுக்கள் எல்லாம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டவையன்று.

கிரேக்கம்

கிரேக்கச் சொல்லான ‘oruza’ என்பது தமிழ்ச் சொல்லான ‘அரிசி’ என்பதிலிருந்து வந்ததாக விளக்கலாம். ஆனால் இதிலுள்ள ‘s’ என்னும் ஒலி ஒரு புதிராகவே உள்ளது. சங்க காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் ஒலிப்புடை வெடிப்பொலிகள் மொழி முதலிலும் வருவதைக் கிரேக்க யாத்திரிகர்கள் தமிழ்ச் சொற்களைத் தம் மொழியில் எழுதியிருப்பதைக் கொண்டு உறுதிப்படுத்துகிறோம். சான்றாகத் ‘தமிழகம்’ என்பது ‘damarica’ என எழுதப்பட்டுள்ளது. ழகர மெய் மேற்கத்திய மொழிகளில் ரகர மெய்யாகிறது. இந்திய மொழிகளிலுள்ள வெடிப்பொலிகளின் இயல்புகளைப் பற்றிக் கிரேக்கர்கள் தம் மொழியில் எவ்வாறு கேட்டு உணர்ந்தார்களோ அவற்றை அடிப்படையாகக் கொண்டு இங்கு எதுவும் திட்டவட்டமாகக் கூறமுடியாது. சமஸ்கிருத, பிராகிருதப் பெயர்ச் சொல்லான ‘Candragupta’ என்பது ‘Santra Kottaras’ எனக் கிரேக்கத்தில் காணப்படுகிறது. இரண்டாவது சொல்லின் ‘g’ எவ்வாறு ‘k’ ஆனது என்பது தெளிவாகவில்லை. மொழி முதல் அகரம் தமிழில் பின் உயிராக இருந்திருக்க வேண்டும். எனவே கிரேக்கர் அதனை ஒகரமாக எழுதினர். ஆகாரத்தைப் பொறுத்த வரையில் இத்தவறு வரவில்லை. தமிழ் ‘ஆர்க்காடு > ஆர்காடு’ என்றாகிறது. தமிழின் மொழி இடை இகரம், கிரேக்கத்தில் உகரமாகிறது. இகரம் பிற்காலத்தில் குற்றியலுகரமாக மாறியது போல இங்கும் மாறியிருக்க வாய்ப்புண்டா என்பதையும் ஆராயவேண்டும்.

கிரேக்க, உரோமானிய யாத்திரிகர்களால் பல தமிழ் இடப் பெயர்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளன. பண்டைக் காலத்தில் மேலைநாட்டவர் எப்பகுதிகளோடு வணிகம் புரிந்தனர் என்பதை விளக்குதற்குரிய வரலாற்று முக்கியத்துவம் இப்பெயர்களுக்கு உண்டு. தமிழ் ஒலிகளுக்கும் அவை எழுதப்பட்ட கிரேக்க வரிவடிவத்துக்கும் இடையே உள்ள உறவை நிறுவுவதற்கு மொழியியல் கண்ணோட்டத்தில் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிரேக்க ஆசிரியர்களின் கிளை மொழி, தமிழ் மூலங்கள், இவற்றின் ஒலியன் அமைப்பு முதலியன தொடர்பான பல வினாக்களுக்குரிய விடைகளை இனியாவது கண்டறிய வேண்டும்.