பக்கம் எண் :

படர
 

தமிழ் மொழி வரலாறு

294

படர்க்கை ஒருமை உயர்வைக் குறிக்க வழங்குதல்

ஆண்பால் அல்லது பெண்பால் ஒருமையைப் பயன்படுத்துவது மதிப்புடையதாக இல்லாத இடங்களில், அஃறிணை ஒருமையின் (ஒன்றன் பாலின்) ஆட்சி விரிவாக்கப்பட்டது. ஆனால் இங்கு ஒரு கிளைமொழி மாற்றம் உண்டு. தந்தை, பாட்டன் முதலியோரை மரியாதை ஒருமையில் பேசினாலும் அன்னை, அக்காள், தங்கை முதலியோரைப் பெண்மை ஒருமையிலும் அண்ணனையும் பிறரையும் ஆண்பால் ஒருமையிலும் பேசுவதைப் பிராமணர்களும் பிறரும் மரியாதைக் குறைவாகக் கருதுகின்றனர். சென்னையிலும் பிறவிடங்களிலும் பிராமணர் அல்லாதாரின் கிளைமொழிகள் சிலவற்றிலும் ஆண்பால், பெண்பால் ஒருமையைப் பயன்படுத்துவது மரியாதைக் குறைவு எனக் கருதப்பட்டு அவற்றின் ஆட்சி ஒதுக்கப்படுகிறது. இத்தகைய இடங்களில் ஒன்றன்பால் பயன்படுத்தப்படுகிறது.

சான்று : அண்ணன் வந்தது

அக்காள் வந்தது
தங்கை வந்தது

தெலுங்கில் பெண்பாலுக்கு ஒன்றன்பால் வழங்கும் போக்கின் விளைவே இது என வாதிடத் தோன்றலாம். ஆனால் ஆண்பாலுக்கும் ஒன்றன்பால் பயன்படுத்தப்படுவதை நோக்கவேண்டும். எனவே துறவிகளைக் குறிக்க ஒன்றன்பால் உயர்வு நோக்கிப் பயன்படுத்தப்படுவதாக முன்னர்க் கூறியதன் விரிவே இது என்பது புலனாகும்.

உயர்வு அல்லது மரியாதையைக் குறிக்க வரும் பிந்து நிலைகள்

‘உயர்வு - தாழ்வுடைய’ தமிழ்ச்சமுதாயத்தின் ‘படி நிலை அமைப்பு’ வேறொரு வகையான ஆட்சியையும் தமிழில் வளர்த்துள்ளது. ஒரு செய்தி கூறப்படும் பொழுது வினைமுற்றானது பல்வேறு தன்மையுடைய இடைச்சொற்களைப் பெறுகிறது. அவற்றில் சில விளி வேற்றுமையில் உள்ள தனிச் சொற்களாகும். ‘ஏடா’ என்பது ஆண்பால் ஒருமையிலும், ‘ஏடி’ அல்லது ‘அடி’ என்பது பெண்பால் ஒருமையிலும் வழங்குகின்றன. ‘அய்யா’ அல்லது ‘ஓ அய்யா’ என்பது ஓய் என மாறித் தாழ்ச்சியுறுகிறது. எனவே அது மதிப்பிற்குரிய உயர்ந்தோரைக் குறிக்காது சமமானவரைக் குறிக்க வழங்குகிறது. பெண்களிடம் பேசும்பொழுது ‘அம்மா’ என்பது உயர்வைக் காட்ட ஆளப்படுகிறது. இங்ஙனமே ஆடவர்களின் உயர்வைக் குறிக்க உரையாடலில் ‘அப்பா’ என்ற சொல் ஆளப்படுகிறது. இவைகளெல்லாம் முறையே da, di, ya, ma, pa