பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

32

திராவிட மொழியைக் குறிப்பனவாக நிற்கத் தேவையில்லை என்பது புலனாகும்.

பிரம்மகிரி அகழ்வாராய்ச்சியில் வியப்புத் தரும் வகையில் கிட்டிய கண்டுபிடிப்புக்களின் விளைவாகத் திராவிட மொழி பற்றிய ஆராய்ச்சிப் பிரச்சினைகள் மேலும் சிக்கலாகியுள்ளன. இரும்பைப் பயன்படுத்திய பெருங்கற்கால நாகரிகத்தினர் ( Magalithic Culture) இங்கு வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கற்களால் கட்டப்பட்ட துளையுடைய கல்லறைகளை அவர்கள் கட்டியிருந்தனர். கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் தென்னகத்திற்குப் புதிதாக அந்த நாகரிகத்தினர் வந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுவர். அவர்களே திராவிடர்கள் எனவும் கூறப்படுகிறது. எனினும் இக்கருத்து அனைவராலும் ஏற்கப்படுவதில்லை. அவர்கள் திராவிடர்களே எனின், அவர்கள் தென்னகத்தில் நுழையத் தொடங்கிய காலத்தின் முன்னெல்லை என்ன? அவர்கள் வருவதற்கு முன்னர் இப்பகுதியில் இருந்த மக்கள் யார்? என்றெல்லாம் கேட்கப்படுகிறது. அசோகரின் கல்வெட்டுக்கள் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிப் பேசுகின்றன. மகாபாரத காலத்து அரசனான பாண்டுவின் பெயரிலிருந்து பாண்டியர் என்ற சொல் வந்திருப்பதாக வரருசி விளக்கம் தருவதிலிருந்து, பாண்டியர் அசோகரது கல்வெட்டுக்கள் எழுந்த காலத்துக்கும் முன்னரே அறியப்பட்டிருந்தனர் என்பது புலன் ஆகும். மக்களையோ, அரசனையோ குறிப்பது என்ற முறையில் சோழர் என்ற சொல்லும் அவருக்குத் தெரிந்திருந்தது. வரருசியின் காலம் கி. மு. 4-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதே. வேதங்களிலும் வேதங்கட்குப் பிற்பட்ட காலத்து வடமொழி இலக்கியங்களிலும் காணப்படும் சில சொற்கள் திராவிடமொழிகளைச் சேர்ந்தவை எனின், தென்னகத்திற்குள், திராவிடர் வருகை நிகழ்ந்த காலமாகக் கி. மு. பத்தாம் நூற்றாண்டே எண்ணப்பட வேண்டும். புதிதாக வந்தவர்களே திராவிடர்கள் எனக் கொண்டாலும் கூட, அவர்கள் இப்பகுதியில் வாழ்ந்தவர்களின் மொழியையே தாமும் மேற்கொண்டிருக்கக் கூடும்.

2 உட்பிரிவுகள்

மூலத் திராவிடமொழி மூன்று கிளைகளாகப் பிரிந்தது என்று கூறப்படும். பலுசிஸ்தானத்தில் பேசப்படும் பிராகூய் மொழி வங்காளம், ஒரிசா முதலிய பகுதிகளில் பேசப்படும் மால்டோ,