|
தமிழ் மொழி வரலாறு 48
இரண்டாவது, மூன்றாவது
வினைவிகற்ப வாய்பாட்டு வினை வேர்களின் ஈற்றில் வரும் மருங்கொலிகள் எவ்வாறு
செயல்படுகின்றன என்பதை முதலில் கவனிக்க வேண்டும். இவ்வேர்கள் ஆரம்பத்தில்
மூக்கொலிகளில் முடிந்தன என முன்னர் நாம் கண்டோம். முதலில் இத்தகு மூக்கொலி இருந்ததால்,
இடைவெளியானது (
pause) முதலில் திறந்த
தன்மையுடையதாக குரல்வளை வெடிப்பொலியின்றி அமைந்தது. இதற்கு மாறாக 9, 10 ஆவது
வினைவிகற்ப வாய்பாட்டு வேர்கள் என்பன குரல்வளை வெடிப்பொலியைப் பெற்றிருந்தன என்றே
கொள்ள வேண்டும்; ஏனெனில் அவைகளுக்குப் பிறகு வரும் வெடிப்பொலிகள் இரட்டிக்கின்றன;
மேலும் அவை ஒலிப்பிலா ஒலியாகவும் ஆகின்றன; அவற்றின் ஒலிப்பிலா உச்சரிப்பு அவற்றுக்கு
இணையான நாவளை அல்லது கடையண்ண வெடிப்பொலியுடன் சமப்படுத்தப்படுகிறது. ஒலிப்புடை,
ஒலிப்பிலா மருங்கொலிகளை ஒப்பிட்டறிய ‘மீள்க’ என்பதனை ‘மீள்க்க’ என்று
மலையாளத்திலும் திருநெல்வேலித் தமிழிலும் எழுதப்படுவதைச் சான்றாகக் காட்டலாம்.
ஒலிப்பிலா மருங்கொலி தமிழ் வரிவடிவத்தில் கடையண்ண நாவளை வெடிப்பொலியாக எழுதப்படுவது
இக்கருத்தை ஆதரிக்கும். ஆனால் “இடைவெளியின் மாற்றம் அல்லது ஊசலாட்டம்”, “கல் கடிது -
கற்கடிது” என்பன போன்ற வடிவங்கட்கு வழி வகுக்கலாம். பதினோராவது வினைவிகற்ப வாய்பாட்டு
வேர்களின் இறுதியிலும் குரல்வளை வெடிப்பொலி இருப்பதாக நாம் கொள்ள வேண்டும்; ஏனெனில்
இவ்வேருடன் வெடிப்பொலி தொடரும் பொழுது அது இரட்டிக்கிறது. சான்று : “பார்த்தான்;
பார்க்க”.
தன்வினை
பிறவினையாவதால் இங்கு வல்லொலி இரட்டிக்கிறது என்ற கேள்விக்கே இடமில்லை. “நேர்ந்தது”
என்பதற்கு இணையாக “நேர்த்தது” என ஒன்று இல்லை. இது போலவே 11ஆவது வினைவிகற்ப
வாய்பாட்டைச் சேர்ந்த “குதி” என்பதிலும் இரட்டித்தல் உள்ளது. ஆனால் 4 ஆவது வினை விகற்ப
வாய்பாட்டைச் சேர்ந்த “அணி” என்பதில் வெடிப்பொலி இரட்டிப்பு இல்லை. 1, 2, 3, 4, 5,
6, 7, 8 ஆவது வினைவிகற்ப வாய்பாட்டு வேர்ச் சொற்களின் குரல்வளை வெடிப்பொலி
இல்லாதிருக்கலாம். எனவே அவற்றைத் தொடரும் வெடிப்பொலிகளும் இரட்டிப்பதில்லை.
4 ஆவது வினைவிகற்ப
வாய்பாட்டைச் சேர்ந்த “அணி” போன்றவற்றையும் 11ஆவது வினைவிகற்ப வாய்பாட்டைச்
சேர்ந்த ‘பார், குடி’ என்பவற்றையும் ஒப்பிடுவதைச் சிலர் மறுக்கக்கூடும்.
|