பக்கம் எண் :

என
 

தமிழ் மொழி வரலாறு

74

என்ற வினா இங்கு எழுகிறது. “முதல் நா அண்ணம்”17, “இடை நா அண்ணம்”18, “நுனிநா அண்ணம்”19 முதலிய தொடர்களை அவரே ஆள்கிறார். இவ் அடைமொழிகள் நாவிற்கு மட்டுமா அல்லது நா, அண்ணம் ஆகிய இரண்டிற்கும் பொதுவானதா என்பது விளங்கவில்லை. முதல் அண்ணம், இடையண்ணம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் இருவழிகளிலும் கொள்ளலாமாகையால் சிக்கல் எதுவும் இல்லை.

அ. கடை நா ( Back of the tongue) ஒலிப்பானாக அமைதல் கடை நா கடையண்ண ஒலி ( Dorso Velar)

கடைநா கடையண்ணத்துடன் மட்டுமே பொருந்துகிறது. கடையண்ண வெடிப்பொலியான ககரமெய்யும் அதற்கு இணையான மூக்கொலியான ஙகர மெய்யும் பிறக்கின்றன.

ஆ. இடைநா ஒலிப்பானாக அமைதல்

இடைநா இடையண்ணத்துடன் மட்டுமே பொருந்தும். இதனால் இடையண்ண அடைப்பானும் மூக்கொலியும் பிறக்கின்றன. இவை இன்று முன்னே ஒலிக்கப்பெறுகின்றன.

இ. நுனிநா ஒலிப்பானாக அமைதல்

“நுனிநா அண்ணம்” என்ற தொடர் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நுனிநாப்பகுதி நா பதியில் விளிம்பினால் தொடுதலும் அல்லது நுனியினால் நுனியண்ணத்தைத் தொடுதலும் அல்லது கீழ்ப்பகுதியில் உள்ளண்ணத்தோடு வளைந்து தொடர்பு கொள்ளுதலும் மேற் கொள்ளக் கூடும். நுனிநாவானது பல்லை அல்லது ஈற்றைத் தொடுவது பற்றி நாம் இங்குக் கருதத் தேவை இல்லை. அண்ணத்தோடு சேர்ந்த நுனிநாவிற்கெனத் தொல்காப்பியர் வேறுபட்ட மூன்று வகை மெய்யொலிகளை அமைத்துக் காட்டுகிறார்.


17. தொல்காப்பியம், 89

“ககார ஙகாரம் முதல் நா அண்ணம்”.

18. தொல்காப்பியம், 90

“சகார ஞகாரம் இடை நா அண்ணம்”.

> 19. தொல்காப்பியம், 91

“டகார ணகாரம் நுனி நா அண்ணம்”.