பக்கம் எண் :

New Page 6
 

தமிழ் மொழி வரலாறு

75

நுனியண்ண வெடிப்பொலி

நுனியண்ண வெடிப்பொலியும் அதற்கு இனமான மூக்கொலியும் முதற் பிரிவில் சேர்ந்தவையாகும். ‘நுனிநா அண்ணம்’ என்ற தொடரில் வரும் ‘அண்ணம்’ என்பதன் பொருள் குறித்து, இவ்வொலிகளின் பிறப்பை விளக்குகையில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இங்கு ‘நுனியண்ணம்’ என்றே பொருள்படுகிறது. நுனிநா அண்ணத்தைத் தொட உயர்ந்து செல்வதாகக் கூறப்படுகிறது என்றாலும் கூட றகர மெய்யைப் பிறப்பிக்கையில் உயர்ந்து சென்றடையாமலே நுனிநாவானது அண்ணத்தைத் தொடுகிறது.20 ‘அணரி’ என்பதன் பொருள் ‘உயர்ந்து சென்றடைய முயலுதல்’ என்பதாகும். அது நாவளைவாகத்தான் இருக்கவேண்டும் என்ற தேவையில்லை. இவ் வொலிகளை நுனிநா ஒலிகள் ( Apicals) என வகைப்படுத்தலாம். ஆனால் சமஸ்கிருதத்தில் உள்ள அண்ணமுடி ஒலிகளுடன் ( Cerebrals) ஒத்த டகரம் ணகரம் ஆகியவற்றின் பிறப்பைக் கூறுங்கால், ‘அணரி’ என்னும் சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படவில்லை. இவ்வொலிகள் தொல்காப்பியர் காலத் தமிழில் நுனிநா ஒலிகளாக இருக்கவில்லை என்றே கருதவேண்டும். அவற்றில் நாவிளிம்பு தொடுதல் ( Blade Contact) என்பது இருந்தது. டகரமெய் இன்று எல்லா இந்திய மொழிகளிலும் நாவளை ஒலியாக உள்ளது. ‘நுனிநா அண்ணம்’ என்ற தொடருக்கு நுனிநாவானது அண்ணத்தின் எப்பகுதியுடனாவது தொடர்பு கொள்வது எனப்பொருள் கொண்டாலும் கூட நாவிளிம்பு அண்ணத்தைத் தொட டகரமெய் பிறப்பதாகவும், நுனிநா அண்ணத்தைத் தொட றகர மெய் பிறப்பதாகவும் தொல்காப்பியர் கூறும் வேற்றுமையை ( Contrast) நன்கு வலியுறுத்திக் கூறவேண்டும். நுனியண்ண ஒலியான றகர மெய்யானது நுனிநா ஒலி என்றும், நாவளை ஒலி எனக் கூறப்படும் டகர மெய்யானது நா விளிம்பு ஒலி என்றும் முடிவு கூறலாம். ஆனால் பின்னர் இவ்விரு ஒலிகட்கு இடையேயான வேறுபாட்டைத் தெளிவாக்க டகர மெய்யானது நாவளை ஒலியாகவும் அண்ண முடியைத்தொடும் ஒலியாகவும் ஆனது. இது சமஸ்கிருதச் செல்வாக்கின் விளைவால் நிகழ்ந்ததாகவும் இருக்கலாம்.
 


20. தொல்காப்பியம், 94

“அணரி நுனிநா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்”.