ஏற்படுகிறது. ஆனாலும் மனம் ஒன்று உள்ளதே; அது பழைய அன்பின்
தொடர்பு முதலியவற்றை அப்படி எளிதில் மறந்துவிடல் இயலாது. அதனால் உருவாகும் சிக்கல்கள்
இந்தக் கதையில் தீட்டப்படுகின்றன. மகாபாரதத்தில் மிகச் சுருங்கிய அளவில் குறிப்பிடப்படும்
ஒரு பாத்திரம் இவருடைய கற்பனையில் பெரிய அளவில் வளர்ந்து சிந்தனையைக் கவர்ந்து
நிற்கக் காண்கிறோம்.
‘நந்திபுரத்து நாயகி’ என்பது ‘விக்கிரமன்’ தந்த வரலாற்று
நாவல். ‘மகரயாழ் மங்கை’, ‘ஆலவாய் அழகன்’, ‘நாயகி நற்சோணை’, ‘நந்திவர்மன்
காதலி’, ‘அருள்மொழி நங்கை’, ‘திருச்சிற்றம்பலம்’ முதலியன ஜெகசிற்பியன் படைத்த
வரலாற்று நாவல்கள். சில சமுதாய நாவல்களையும் பல சிறுகதைத் தொகுப்புகளையும் அளித்துள்ளவர்
அவர். சிறுகதைகளில் இன்றைய ஏழை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நன்கு
வடிவு தந்துள்ளார். அவருடைய நேரிய நடையும் கலை மெருகும் நாவல்களுக்கு இலக்கியச் சிறப்புத்
தருகின்றன.
‘யவனராணி’, ‘கடல்புறா’, ‘மன்னன் மகள்’, ‘மலைவாசல்’,
‘ஜீவபூமி’, ‘கன்னிமாடம்’, ‘பல்லவ திலகம்’ முதலிய பல வரலாற்று நாவல்களின் ஆசிரியர்
‘சாண்டில்யன்’. இவை பத்திரிகைகளில் தொடர்கதைகளாக வந்தவை. படிப்பவர்கள் ஆர்வத்துடன்
நாடும் வகையில் சுவையை மேன்மேலும் வளர்த்துக் கதை சொல்லும் திறன் உடையவர் அவர்.
பார்த்தசாரதி, பி.சி. கணேசன் முதலியோரும் வரலாற்று நாவல்கள் எழுதித் தமிழிலக்கிய
வளர்ச்சிக்கு உதவியவர்கள். அரு. ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ என்பது குறிப்பிடத்தகுந்த
வரலாற்றுக் கற்பனை.
இராதாமணாளனுடைய ‘பொற்சிலை’ சுவையுள்ள இலக்கியப் படைப்பாகும்.
டி.கே. சீனிவாசன் படைத்த ‘ஆடும் மாடும்’ கற்பனைச் சிறப்புடையது.
இளமைக்குப் பின் பெறும் காதலுணர்வுகளை எடுத்துக் காட்டுவது
சாவியின் ‘விசிறி வாழை’. பி. எம். கண்ணன் நடப்பியல் முறையில் சில நாவல்களைப்
படைத்துள்ளார். சோமு, இந்திரா பார்த்தசாரதி, நல்லபெருமாள், உமாசந்திரன், மாயாவி,
ஜெயகாந்தன் ஆகியோரின் படைப்புகள் இங்குப் பாராட்டுடன் குறிப்பிடத்தக்கவை.
தென் திருவாங்கூரில் தமிழர்கள் பேசும் பேச்சு மொழியில்
கதை எழுதுபவர் ஹெப்சிபா ஜேசுதாசன். ‘புத்தம் வீடு’, ‘டாக்டர் செல்லப்பா’ என்பவை
அவர்க்குப் புகழ் தேடித் தந்தன. கொங்குநாட்டுப் பேச்சுமொழியைக் கையாண்டு ஆர்.
சண்முக சுந்தரம் எழுதிய கதைகள் ‘பூவும் பிஞ்சும்’, ‘நாகம்மாள்’, ‘அழியாக் கோலம்’
ஆகியவை. பூவை
|