பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 307 -

வாழ்க்கை தொடங்குகிறாள். நாளாவட்டத்தில் அவனை வசப்படுத்தும் முயற்சியில் வெற்றிபெறுகிறாள். ‘திரிசங்கு சொர்க்கம்’ என்ற கதையில் வாழ்க்கையில் காணும் ஒரு கோணத்தை அம்பலப் படுத்துகிறார். திருமணத்தையே வெறுத்துவந்த ஓர் ஆசிரியமங்கை தன் இளமையை எல்லாம் பாழாக்கியபின், மனம் மாறி முப்பத்தேழாம் வயதில் தன் மாணவன் ஒருவனையே மணந்துகொள்வதை அந்தக் கதை காட்டுகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் புண்களை எடுத்துக்காட்டி, அவற்றிற்கெல்லாம் அடிப்படையான அந்த ஏற்றத் தாழ்வைச் சாடுகிறார் சில கதைகளில். குடிசை வாழ்க்கையையும், மாளிகை ஆடம்பரத்தையும் முரண்படுத்திக் காட்டுவதில் வல்லவர் அவர். ‘உண்ணாவிரதம்’ என்ற கதையில் வரும் தொழிலாளிப் பெண் ஒருத்தி, மற்றத் தொழிலாளிகளைப் பார்த்து, “நீங்கள் எல்லாம் மனுசங்கதானாய்யா? வயித்துக்குச் சோறு தின்னா போதுமா? மானம் வேணாமா?” என்று முழக்கம் செய்வதைக் கேட்கிறோம். இவ்வாறு சில நோக்கங்களுக்காகக் கதைகள் எழுதுபவர்போல் தோன்றினாலும், அவருடைய படைப்புகள் சிறுகதையின் இலக்கணம் வழுவாமல் அழகிய கலை வடிவம் பெற்று விளங்குகின்றன.

‘தேவன் வருவாரா?’ என்ற தொகுப்பில் தனிச் சிறப்புடைய சிறுகதைகள் - குழந்தைகளைப்பற்றியவை - சில உள்ளன. அங்கும் வறுமையால் வாடிப் பலியாகும் குழந்தைகள் உள்ளன. அந்தக் காட்சிகளை அவர் தீட்டுவதற்குப் பயன்படுத்தும் சொற்றொடர்கள் உணர்ச்சி மிகுந்தவை; எவ்வகையான மதிப்பையும் தொடர்பையும்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் எழுதுவதால், அவருடைய சொல்லாட்சி ஆற்றல் மிகுந்ததாக உள்ளது.

‘பிரம்மோபதேசம்’ என்னும் கதையில் சமுதாயத்தின் பழம்புண் ஒன்றை அறுத்துச் சிகிச்சை செய்கிறார். பிறப்பால் உயர்வு  பேசும் சாதி வழக்கத்தைச் சாடித் தள்ளுகிறார் ஓர் உயர்ந்த சான்றோரைக் கொண்டு. ஒழுக்கத்தில் சிறந்த அந்தப் பிராமணர், தாழ்ந்த குலத்தான் என்று பேசப்படும் ஒருவனுக்குப் பூணூல் இட்டு, “நீதான் பிராமணன்” என்று ஏற்றுக்கொள்வதாகக் கதை அமைகிறது. இப்படிப்பட்ட கதைகளில் ஆசிரியராகிய ஜெயகாந்தன், “எனது கதைகள் பொதுவாகப் பிரச்னைகளின் பிரச்னை” என்று கூறுவது முற்றிலும் பொருத்தமே. ‘பகல்நேரப் பாசஞ்சர் வண்டி’ என்ற கதையிலும் சாதி வேற்றுமைக்கு எதிராகப் புரட்சி எழுகிறது. ஆனால் எதிர்த்து எழுவோர் தாழ்த்தப்பட்ட சாதியார் அல்லர்; உயர்ந்த சாதியாரே. இவ்வாறு அவர்களைப் புரட்சி செய்விப்பதிலே எழுத்தாளரின் புரட்சி அமைகிறது. பிராமண நங்கை ஒருத்தி தான் சாகும் தறுவாயில் தன்