பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 14 -

பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்

வேறு

35. வேல்விழி மாது கேட்டு விசாலநேத் திரையோ வென்னைக்
  கான்மிசை வீழ வெண்ணிக் காண்டற்கு நின்றா ளென்று
  பான்மொழி யமிர்த மன்னாள் பரம னாலைய மடைந்து
 

நூன்மொழி யிறைவன் பாதம் நோக்கிநன் கிறைஞ்சி னாளே.

வேல் போன்ற கண்ணினையுடைய பிரிதிதேவி தோழி சொன்ன செய்தி கேட்டு, ‘அவள் விசாலநேத்திரையோ? என்னைத் தன் காலில் விழுந்து பணிவிக்கும் எண்ணத்துடன் என்னைக் காண்பதற்கு நிற்கின்றாள் போலும்‘ என்று உரைத்தாள்.  பின், பால் போன்ற மொழியையுடைய அமிர்தம் போன்று இனிய பிரிதிதேவி இறைவனுடைய ஆலயம் அடைந்து நூல்களில் சொன்ன முறைப்படியே இறைவன் பாதத்தை நோக்கி வணங்கினாள்.         (35)

ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்

வேறு

36. கொல்லாத நல்விரதக் கோமானினைத் தொழுதார்
  பொல்லாக் கதியறுத்துப் பொற்புடைய முத்திதனைச்
  செல்லற் கெளிதென்றே சேயிழையாள் தான்பரவி
 

எல்லா வினைசெறிக்கு மியன்முனியைத் தான்பணித்தாள்.

கொல்லாத நல்ல விரதமுடைய கோமானே.  நின்னைத் தொழுபவர் தீய கதிகளை நீக்கி அழகிய முத்தியை சென்று அடைதற்கு எளிதாகும் என்று அவள் துதித்து, ஆண்டிருந்த எல்லா வினைகளையும் அடக்கும் பண்பார்ந்த முனைவனைத் தொழுதாள்.       (36)

முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்

37. பணிபவட்கு நன்குரையிற் பரமமுனி வாழ்த்த
  அணிபெறவே நற்றவமு மாமோ வெனக்கென்றாள்
  கணிதமிலாக் குணச்சுதனைக் கீர்த்தியுட னேபெறுவை
 

மணிவிளக்க மேபோன்ற மாதவனுந் தானுரைத்தான்,