பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 19 -

சிறுவன் பாதம் பட்டபோதே தானே திறந்து கொள்ளும். நீங்கள் வழிபடுவீர்கள்.  அத்தருணத்தில் அச் சிறுவன் ஆண்டுள்ள நாகவாவியில் வழுக்கி விழுவான்.  ஆனால், ஆபத்தொன்றுமின்றி அதிசயமான நன்மையே அடைவான்.  பிறகு நீலகிரி எனும் மதயானையையும் அடங்காத ஒரு முரட்டுக் குதிரையையும் மதமடக்கிப் பெருமிதமாய்ச் செலுத்துவான் என்றார்.         (7)

47. அருள்முனி யருளக்கேட்டு வரசன்றன் றேவிதன்னோ
  டிருவரு மிறைஞ்சியேத்தி யெழின்மனைக் கெழுந்துவந்து
  பருமுகிற் றவழுமாடப் பஞ்சநல் லமளிதன்னிற்
  திருநிகர் மாதுமன்னன் சேர்ந்தினி திருக்குமந்நாள்.

இங்ஙனம் கருணைமிக்க பிகிதாசிரவ முனிவர் உரைத்தருளக் கேட்ட சயந்தர மன்னன், பிரிதிவிதேவியோடும் அவரடியைப் பணிந்து எழுந்து விடைபெற்று மீண்டு, தன் அரண்மனைக்கு ஏகி, மேகம் தவழும் மாளிகையிலுள்ள பஞ்சணையில் இருவரும் இனிது இன்பம் நுகர்ந்துவரும் நாளிலே-

திரு-திருமகள். திருநிகர் மாது-திருமகளுக்கு ஒப்பாகச் சொல்லத்தக்க பிரிதிதேவி. (8)

 பிரிதிதேவி கருக் கொள்ளுதல்

வேறு

48. புண்டவழ் வேற்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
  மண்ணினி துண்ண வெண்ணு மைந்தன்பூ வலய மாளும்
  பண்ணுகக் கிளவி வாயிற் பரவிய தீருஞ் சேரும்
  கண்ணிய மிச்ச மின்னைக் கழித்திடு முறுப்பி தாமே.

ஊன் தவழும் வேல் போன்ற கண்ணையுடைய பிரிதிதேவி பூமண்டலத்தையாளும் தன் குமாரனுடைய பூரண கருப்பத்தின் மயற்கைக் குறியால் மண்ணையும் இனிதென உண்பாள்.  அம் மயற்கைத் துன்பம் இசையுந்தோறும் மைந்தனுடைய இன்சொற் கேட்டுப் பரவிக் களிக்கத் தீரும்.  மின்னொளியைக் கெடுக்கும் அவள் உறுப்பு நலம் சிவப்புற்றது.         (9)

புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்

49. திங்க ளொன்பான் நிறைந்து செல்வனற் றினத்திற் றோன்றப்
  பொங்குநீ்ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் லுவகை யாகித்
  தங்குபொன் னறைதி றந்து தரணியுள் ளவர்க்குச் சிந்திச்
  சிங்கநேர் சிறுவ னாமம் சீர்பிரதா பந்த னென்றார்.