பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 2 -

தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்

1. செந்தளிர்ப் பிண்டி யின்கீழ்ச் செழுமணி மண்ட பத்துள்
  இந்திர னினிதி னேத்து மேந்தரி யாச னத்தின்
  அந்தமா யமர்ந்த கோவி னருள்புரி தீர்த்த காலங்
  கொந்தல ராசன் நாக குமரனற் கதைவி ரிப்பாம்.

சிவந்த தளிர்களுடன் கூடிய அசோக மரத்தின் கீழே, வளப்பம் பொருந்திய அழகிய மண்டபத்தினுள், இந்திரன் துதிபாடி நிற்க, சிங்கங்கள் தாங்கிய அரியாசனத்தின்மேல் அழகுற வீற்றிருக்கும் அருகப் பெருமானின் அருளுடன், அவன் தந்தருளிய ஆகமங்களின் காலத்து வாழ்ந்த கொத்தான பூக்களை அணிந்த அரசனாகிய நாக குமாரனின் புண்ணிய சரிதத்¬î¤வரித்துச்சொல்லுவோம்.     (1)

2.  திங்கள் முந்நான்கு யோகந் தீவினை யரிய நிற்பர்
  அங்கபூ வாதி நூலு ளரிப்பறத் தெளிந்த நெஞ்சிற்
  தங்கிய கருணை யார்ந்த தவமுனி யவர்கள் சொன்ன
  பொங்குநற் கவிக்க டறான் புகுந்துநீர்த் தெழுந்த தன்றே.

பன்னிரண்டு மாதங்கள் யோக நிலையில் விடாது நின்று, தம் தீவினைகளைத் தம்மிடத்தின்றும் போக்கி நிற்பவரும், அங்காகமமாகிய பழைய முதல் நூலுள் குற்றம் நீங்கத் தெளிந்த நெஞ்சமுடைய வரும், நெஞ்சத்தில் கருணை நிறைந்தவருமான தன்மையையுடையவர்கள் தவ முனிவர்கள்.  இம் முனிவர்கள் சொன்ன கவின் நிறைந்த நல்ல கவிக்கடலிலே படிந்து, அக் கடல் நீரின் குளிர்ச்சியைப் பெற்று என் உள்ளம் ஓங்கியது.

அரிப்பற-குற்றம் நீங்க.
அங்கபூவாதி நூல்-அங்க பூர்வாங்க ஆகமம்.                   (2)

அவையடக்கம்

3. புகைக்கொடி யுள்ளுண் டென்றே பொற்புநல் லொளிவிளக்கை
  இகழ்ச்சியி னீப்பா ரில்லை யீண்டுநற் பொருளு ணர்ந்தோர்
  அகத்தினி மதியிற் கொள்வா ரரியரோ வெனது சொல்லைச்
  செகத்தவ ருணர்ந்து கேட்கச் செப்புதற் பால தாமே.

அழகிய நல்ல விளக்கின் ஒளியினூடே புகையொழுங்கும் உள்ளது என்று அந்த விளக்கை இகழ்ந்து நீக்குவார் யாரும் இல்லை.  இவ்வுலகத்தின்கண் நற்பொருளாம் ஞானத்தை உணர்ந்தோர்