பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 26 -

அங்ஙனமின்றித் தன் குமாரன் நீராடுகின்ற நடைவாவியின் கரையைப் போய்ச் சேர்ந்தாள்.  அவளைக் கண்ட நாககுமாரன் அன்போடு சென்று கரையேறி அவள் பாதங்களைப் பணிந்தான்.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமன்றோ?  (24)

பொய்பேசிய மூத்த மனைவியை மன்னன் கடிதலும், நாககுமாரன் சுற்றம்சூழ மனை திரும்புதலும்

64. பொய்யுரை புனைந்தவளைப் புரவலனுஞ் சீறினான்
  நையுமிடை மாதரு நாகநற் குமரனும்
  செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் றாங்கியே
  வெய்யவேற்கண் டாயுடன் வியன்மனை யடைந்தனன்.

    பிறகு அவள் கொண்டு சென்ற மாலை, சாந்தம், ஆடை முதலியவற்றைத் தானும் தன் மனைவியரும் அணிந்து கொண்டனர்.  தாயும் தனையனும் நுண்ணிடையுடைய மருமகள்மார்களுமாகிய அனைவர்களும் தம் மாளிகையை அடைந்தனர்.  இக் காட்சிகளை எல்லாம் சயந்தர மன்னன் நேரிற் கவனித்துக் கொண்டிருந்தானாதலால், பிரிதிவிதேவியிடம் சற்றும் பிழை இல்லை, அவள் கற்புக்கரசியே.  விசால நேத்திரையோ இவள் மேற் கொண்ட பொறாமை எண்ணத்தால் இப்பெரும் பாதகமான பொய்யுரைகளைத் தானே கற்பனை செய்து கூறியிருக்கின்றாள் என்று உண்மையுணர்ந்து அவள்மீது அடங்காச் சீற்றங்கொண்டான்.   (25)

பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை

65. மன்னன்றன் தேவியை மாதேயெங்கு போனதென்
  நின்னுடைப் புதல்வனீ ராடற்காணப் போனதென்
  நின்னுடன் மனைதனி லீண்டினிதி னாடலென்
  நந்நகர்ப் புறத்தனைய னாடனீங்க வென்றனன்.

    சயந்தர மன்னன் பிரிதிவிதேவியின் மாளிகை அடைந்து, அவளை நோக்கி, ‘மாதே! நீ எங்கே, என்ன காரணத்திற்காக நகர்ப்புறத்து ஏகினாய்?‘ என, ‘நின் புதல்வன் நீர் விளையாட்டைக் காண வேண்டிச் சென்றேன்‘ என்றாள்.  ‘இனி, நீங்கள் இருவரும் இம்மாளிகையை விட்டு எங்கும் வெளியே செல்லவேண்டா. நாககுமாரனும் நின்னுடன் மாளிகையினுள்ளே விளையாடுவானாக.  வன விளையாட்டு புனல் விளையாட்டு என நகர்ப்புறத்தே போகவேண்டாம்‘ எனக் கட்டளையிட்டுச் சென்றான்.   (26)