பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 37 -

வியாளன் வரக் கண்டான்.  உடனே துட்டவாக்கியன் மந்திரி புத்திரனாகிய எனக்குத் தன் அரசியலையே அளித்த வள்ளல் வியாளனல்லவா என எண்ணி அந் நன்றி மறவாமல் அக்கணமே அவன் பொற்கழல் தொழுதான்.  வியாளனும் அவனுக்குத் தன் தலைவனாகிய நாககுமாரனை அறிமுகப் படுத்தினான்.  அவனும் நாககுமாரனை வணங்கி நட்புடையவனானான்.  சுசீலை என்னும் பெண்மணியை முதலில் விழைந்த அரிவர்மனுக்கே உரிமையாக்கினான்.*             (13)

மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்

வேறு

87. மன்னவ குமரனு மன்னனுந் தோழனும்
  அந்நகர்ப் புறத்தினி லாடன் மேவலின்
  இன்னிசை வீணைவேந் திளையரைஞ் நூற்றுவர்
  அன்னவர்க் கண்டுமிக் கண்ண லுரைத்தனன்.

நாககுமாரனும் துட்டவாக்கியனும் தோழன் வியாளனுமாகிய மூவரும் அந்நகர்ப் புறத்தே சென்று ஓர் நாள் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது அவ்வழியாக யாழிலே வல்லவர்களாகிய ஐந்நூறு இளையவர்கள் வந்து கொண்டிருந்தனர்.  அவர்களைக் கண்டு நாககுமாரன் கேட்கின்றான்.  (14)  

    
88. எங்குளிர் யாவர்நீ ரெங்கினிப் போவதென்
  றங்கவர் தம்முளே யறிந்தொரு வன்சொலுந்
  தங்களூர் நாமமுந் தந்தைதாய் பேருரைத்
  திங்கிவ ரென்கையின் வீணைகற் பவர்களே.

‘இளையவர்களே! நீவிர் யாவீர்?  எங்கு நின்றும் வருகின்றீர்?  எங்குப் போகின்றீாக்ள்?‘ என்று கேட்டான்.  அவர்கட்கு ஆசானாகிய கீர்த்திவர்மன், அவ்விளையர்கள் ஒவ்வொருவருடைய ஊரும் பேரும் தாய் தந்தையர்களையும் அறிவித்து, இவர்கள் என்னிடம் வீணை கற்பவராவார்கள்.             (15)

--------------------------------------------------------------------------------

* இப்பாடலின் இறுதிப் பகுதியுரையில் புதுச் செய்திகள் உள.  ஆனால், அவற்றிற்குரிய மூலம் இல்லை.  வட நூல் காவியம் பற்றியோ பிறவரலாறுகள் கொண்டோ உரையாளர் இங்கு எழுதுகின்றார்.