பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 50 -
116. கலையணி யல்குற் பாவை கங்குலும் பகலு மெல்லாஞ்
  சிலையுயர்ந் தினிய திண்டோட் செம்மலும் பிரித லின்றி
  நிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகரின்றிச் செல்லு நாளுள்
  உலைதலி லுறுவ லீயா னூர்ச்சயந்த கிரிய டைந்தான்.

விற்போர்ப் பயிற்சியிற் சிறந்த தோள்வலிமிக்க குமாரனும் மேகலாபரணம் அணிந்த குணவதியும் இரவும் பகலும் இணைபிரியாராய் அறநூல் விதிப்படி காமவின்பம் நிலைபெறும்படியாக ஊடலுங் கூடலும் விரவ இன்பம் துய்த்துவரும் நாளில் ஓர் நாள் சோர்வில்லாத பேராற்றலுடைய நாககுமாரன் ஊர்ச்சயந்தகிரியைப் போய்ச் சேர்ந்தான்.           (15)

நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்

117. வாமனா லையத்து மூன்று வலங்கொண் டுட்புகுந் திறைஞ்சி
  தாமமார் மார்பன் மிக்க தக்கநற் பூசை செய்து
  சேமமா முக்கு டைக்கீ ழிருந்தரி யாச னத்தின்
  வாமனார் துதிகட் சொல்ல வாழ்த்துபு தொடங்கி னானே.

அங்ஙனம் சேர்ந்த வெற்றிமாலை அணிந்த மார்பன் நேமிதீர்த் தங்கரபகவான் ஆலயத்தை மும்முறை வலங்கொண்டுபோய் உள்ளே சென்று இறைஞ்சித் துதிபாடி பூசனை செய்து மூவுலகிற்கும் சிறந்த பாதுகாப்பாகிய முக்குடையின் கீழேயுள்ள சிம்மாசனத்தின் மிசை வீற்றிருக்கும் வாமனார்மீது பல துதிப் பாடல்களைச் சொல்லி வாழ்த்தத் தொடங்கினான்.           (16)

முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்

வேறு

118. முத்திலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்தடியை
  வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்ணுலக மாண்டுவந்து
  இத்தலமு முழுதாண்டு விருங்களிற் றெருத்தின்மிசை
  நித்தில வெண்குடைக்கீழ் நீங்கா திருப்பவரே.

முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முக்குடையீன்கீழ் வீற்றிருக்கும் உலகிற்கு அறவமுத மழை சொரிந்து உயிர்களை உய்விக்கக்கூடிய பரம ஒளதாரிக திவ்விய தேகமுடைய தீர்த்தங்கரருடைய திருத்தமான பாதகமலங்களை, ஜிநன் என்னும் வெற்றி அடைந்த கடவுளை, அவ் வெற்றியைத்  தாமும்  அடைய  வேண்டும்  எனும்   நோக்கத்தோடு.