பக்கம் எண் :

Nagakumara Kavium


நாககுமார காவியம் - 78 -

உத்தரமதுரை: சூரசேன நாட்டின் தலைநகர்.  இதனை 86ஆம் பாட்டில் மதுரை என்று குறிப்பிடுதலும் கவனிக்கத்தகும் (75).

ஏழிறையிருக்கை வட்டம்: தீர்த்தங்கரர்கள் வந்து வீற்றிருக்கும் சவமசரணமண்டலம் (11).

ஐஞ்நூற்றுவர் (இசைவாணர்): இன்னிசையாழ் வல்ல ஐந்நூறு இளைஞர். இவர் நாககுமாரன் வடமதுரையில் உறைந்த காலத்தில் வந்து எதிர்ப்பட்டனர்.  இவர்கள் காம்பீரநாட்டு அரசகுமாரி திரிபுவனாரதியிடம் வீணை வித்தையில் தோற்றுப் போய்த் தங்களூர் திரும்பிக் கொண்டிருந்தனர் (88, 89).

ஐந்நூறு படர்கள்: பூமி திலகமாபுரத்தில் வாயுவேகனை நாககுமாரன் வதைத்தபின் அவனிடம் வந்து தஞ்சம் புகுந்தவர்கள். வாயுவேகனைக் கொல்பவன் எவனோ அவனே தங்களுக்குத் தலைவன் என்னும் உண்மை யுணர்ந்ததனால், அவர்கள் அவ்வாறு செய்தனர் (139).

ஐராவதச் சேத்திரம்: நாவலந் தீவிலுள்ள நாடுகளுள் ஒன்று(145).

கங்காள நாடு: கங்கை நதியால் நீர்வளம் பெற்றுத் திகழ்ந்தது இந்நாடு.  இதன் கோநகரம் திலகபுரம்.  இங்கிருந்து ஆண்ட மன்னன் பெயர் விசையந்திரன் (142).

கணைவிழி: கிரிகூடபுர அரசன் வனராசனுக்கும் அவன் மனைவி வனமாலைக்கும் பிறந்த மகள்.  இவளை ‘இலட்சுமிதேவி‘ என்றும் அழைப்பர்.  நாககுமாரனுக்கு இவளை மன்னன் வேள்வி முறையால் மணமுடித்து வைத்தான் (99).

கலிங்கம்: இரத்தினபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த நாடு (140).

கனகபுரம்: நாவலந் தீவிலுள்ள நற்பரத கண்டத்து நாடுகளுள் ஒன்றாகிய மகதநாட்டு நகரங்களுள் ஒன்று.  கூவும் குயில்களும் மதுதாரை சிந்தும் மலர்களும் கொண்ட சோலை சூழ்ந்த நகரம் இது.  இந் நகர்க்கு அதிபதியாக விளங்கியவன் சயந்தரன் (26, 27).

காம்பீரநகர்: இது காம்பீர நாட்டின் தலைநகர் (89).

காம்பீரநாடு: இதன் தலைநகரத்தின் பெயரும் காம்பீரம் என்பதே. இங்கிருந்து அரசாண்டவன் நந்தனராசன் (89).

காமகரண்டகம்: வியந்தரதேவன் நாககுமாரனுக்கு நல்கிய அணி கலச்செப்பு (95).

கிரிநகர்: அரிவரன் என்னும் அரசனுக்குரிய நகரம்.  இவ்வரசனின் மனைவி பெயர் மிருகலோசனை; இவனுடைய புதல்வி பெயர் குணவதி (112, 113).